This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“என் மகளும், பேரன் பேத்தியும் கூட என்னைப் பத்தி யோசிக்குறதில்லை. உனக்கு தங்கமான மனசும்மா சத்யா. இரண்டு பேரும் உள்ளே வாங்க,” என மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் பர்வதம்.
“இது என் ரூம். இதையும் கிச்சனையும் தாண்டி நான் எந்த ரூமையும் பயன்படுத்துறதில்லை. அப்பப்போ ஒவ்வொரு ரூமா சுத்தம் செய்வேன். டாக்டர், அம்மா, ராஜா வந்தா வீடு நல்லபடியா இருக்கனுமே!”
பர்வதம் பேசிக் கொண்டிருக்க சக்தி வீட்டை சுற்றிப் பார்த்தாள். கீழே நான்கு அறைகள் இருந்தன. மாடியில் ஐந்து அறைகள். ஒவ்வொரு அறையுமே பெரிதாக, நன்கு வெளிச்சம் நிரம்பியதாக இருந்தன.
“மாடில இருக்க இரண்டு ரூமை தவிர எதை வேணா நீ எடுத்துக்கோம்மா. இந்த பக்கம் இருக்குறது டாக்டர், அம்மாவோட பெட்ரூம். பக்கத்துல இருக்குறது ராஜாவோட பெட்ரூம்!” என்றார் பர்வதம்.
“எனக்கு இரண்டு மூணு ரூம் போதும். மாடின்னா கொஞ்சம் வசதியா இருக்கும்,” என்றாள் சக்தி.
“சத்யாவோட ஃபிரென்ட், உனக்கு இல்லாததா! அம்மாவும், டாக்டரும் தங்கமானவங்க, நீ தங்கி இருக்குறதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”
“அப்போ சரி, எனக்கு மாடி ரூம்ஸ் வசதியா இருக்கும்னு தோணுது. வாடகை எவ்வளவு தரனும்?”
“வாடகையா? அதெல்லாம் எதுவும் வேணாம். சத்யாக்கு நான் தனியா இருக்கேனேன்னு பயம். அதுக்கு தான் ஏதேதோ காரணம் சொல்லி உன்னை இங்கே தங்க சொல்றா. நீயே பூ மாதிரி இருக்க. உனக்கு தான் நான் காவல் இருக்கனும்.”
பர்வதத்தின் பேச்சில் தெரிந்த அன்பும், அப்பாவித்தனமும் சக்தியை கூட ஆச்சர்யப்படுத்தியது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.