கற்பகத்தை பார்த்த உடன் இருவரும் மரியாதை நிமித்தம் பேச்சை நிறுத்தி விட்டு, அவள் பக்கம் பார்த்தார்கள். மருமகள்களை பார்த்து புன்னகைத்த கற்பகம்,
“என்ன டிஃபன் இன்னைக்கு?” எனக் கேட்டாள்.
அவளின் காதில் இருந்த ஃபோனை பார்த்து மற்ற இருவரும் விழிக்கவும்,
“அது பிரச்சனை இல்லை... ம்யூட்டில் (mute) இருக்கு...” என பதிலளித்தாள் கற்பகம்.
“சுண்டல் அத்தை...” என அவளின் முதல் கேள்விக்கு பதில் சொன்னாள் உமா.
வேலை ஆளை அழைத்து தனக்கும் சுண்டல் எடுத்து வர சொல்லி விட்டு, அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் கற்பகம். உமா பேசியபடி சுண்டல் சாப்பிட, பாரதி, அவள் முன் இரண்டு தட்டுகளில் இருந்த சுண்டலை தொடாமல் உமாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள். உமா அவளின் பிறந்த வீட்டை பற்றி பாரதியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வேலை ஆள் எடுத்து வந்த சுண்டலை சாப்பிட்டபடி, ஒரு சில வினாடிகள் மருமகள்கள் பேச்சை கவனித்த கற்பகம்,
“பாரதி, நீ ஏன் சாப்பிடாமல் இருக்க? நீயும் சாப்பிடு,” என்றாள்.
பாரதி பதில் சொல்லாமல் மெல்லியதாக ஸ்மைல் செய்தாள். உமா கற்பகத்திற்கு பதில் சொன்னாள்.
“பாரதி எல்லாம் நம்மளைப் போல இல்லை அத்தை. விவேக் சாப்பிட்டா தான் சாப்பிடுவாளாம். அவர் வரதுக்காக மேடம் காத்திருக்காங்க...”
“ஓஹோ!!! நாம இரண்டு பேரும் அப்படி காத்திருந்தால், நைட் ஒரு வேளை தான் சாப்பிட முடியும் உமா...” என கற்பகமும் இலகுவாகவே பதில் சொன்னாள்.