"பயம் எல்லாம் இல்லை சஞ்சீவ்... பீச்ன்னு சொன்னீங்களே மெரினா பீச்ன்னு நினைச்சேன்..." என்றாள் இந்து புன்சிரிப்போடு.
"சும்மா பீச்சுக்கு போறதா இருந்தா மெரீனாக்கு போகலாம்... ஆனால் நான் உங்க கிட்ட நிறையப் பேசனுமே அ..."
சஞ்சீவ் முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன் இந்துவின் செல் ஃபோன் சிணுங்கியது. டிஸ்ப்ளேவில் கீதாவின் பெயரை பார்த்த இந்து, சஞ்சீவிடம் சொல்லி விட்டு ஃபோனை எடுத்துப் பேசினாள்.
"சொல்லுங்க கீதாக்கா..."
"..."
"இல்லை... மெரீனா பீச் இல்லை..."
"..."
"சரி..."
இந்து பேசுவது தானாக சஞ்சீவின் காதில் விழுந்துக் கொண்டு தான் இருந்தது... முதல் 'சரி'யை தொடர்ந்து அவள் மேலும் சில, பல 'சரி' போடவும், இந்துவைப் பார்த்து கேலியாக சிரித்தான் சஞ்சீவ். பதிலுக்கு சஞ்சீவைப் பார்த்து புன்னகைத்தப் போதும், மறுப்பக்கம் கீதா சொல்வதை இந்து கவனத்துடனே கேட்டுக் கொண்டாள்.
பேசி முடித்து, ஒருவழியாக அவள் அழைப்பை துண்டித்து வைக்கவும், அதற்காகவே காத்திருந்தவன் போல்,
"உங்க ஃபிரென்ட்ஸ விட ஆன்ட்டியே பரவாயில்லை போல இருக்கு இந்து... என்ன இப்போவும் ஒரே அட்வைஸ் மழையா? அண்ணிக்கும் என் மேல இவ்வளவு நம்பிக்கையா?" என்றான்