“அப்போ இதுக்கு மேல நாம சந்திக்காம பேசாம இருக்குறது தான் நல்லது.”
“ஏன்?”
“என் மனசில காதல் வந்திருக்கு அஹல்யா. அது உன்... சாரி உங்க கிட்ட எதிரொலிக்கலன்னு தெரியுது. நான் என் ஆசையை மறைச்சு வச்சு சாதாரணமா பேசுறது எல்லாம் சரியா இருக்காது.”
“நான் ஒன்னு சொல்லவா? இது உங்களுக்கு ஆஃப் வீகென்ட் தான? உங்க அப்பாவையும் அக்காவையும் போய் பாருங்க, பேசுங்க. இங்கே தனியா இருக்குறதால தான் உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுது,” என்றாள் அஹல்யா.
“சரி, நான் போறேன் அஹல்யா. நீங்களும் நான் சொன்னதை யோசிக்குறேன்னு ப்ராமிஸ் கொடுத்தா நான் போறேன்!”
🌼🌸❀✿🌷
ப்ராமிஸ்! யோசிக்காமல் அபினவிடம் சொல்வது எளிதாக இருந்தது. இப்போது தனிமையில் இருக்கும் போது அந்த ஒரு வார்த்தை அஹல்யாவை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது.
அவனிடம் வாக்கு கொடுக்காமல் வந்திருந்தாலும் அபினவுடைய ஞாபகம் வராமல் இருந்திருக்க போவதில்லை.
அஹல்யாவுக்கு அவளுடைய மனம் தெளிவாக புரிந்தது. இது போன்ற உணர்வுகளுக்கு எல்லாம் அவள் அப்பாற்பட்டவள் என்று நினைத்திருந்தது எவ்வளவு பெரிய தவறு.
அவளுடைய இதயத்தை துண்டு துண்டாக கூறு போட்ட வலி நிறைந்த அனுபவங்களுக்குப் பிறகும் ஒரு ஆண் மகனை நேசிப்பது சாத்தியமா?
சாத்தியப் பட வைத்திருக்கிறானே அபினவ்!