பயமாக இருந்தது.
அவளுடைய கையில் இருந்த தாலி சங்கிலியை மெல்ல வருடினாள். இது போன்ற மங்களகரமான ஒன்றை அணிந்துக் கொள்ளும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்ததில்லையே. ஊசியாய் உணர்வுகள் குத்த அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் தடையை மீறி வெளியே வந்தது.
அபினவ் அவனுடைய சட்டைப் பாக்கெட்டுகளில் கையை விட்டு தேடினான். அவன் தேடியது கிடைக்காத ஏமாற்றம் அவனின் முகத்தில் தெரிந்தது.
“என்ன அஹல்யா அழுற? உன் கண்ணீரை துடைக்க கொடுக்க கர்ச்சீப், டிஷ்யூ பேப்பர் எதுவும் கையில இல்லை. என் கையும், வேர்வையா இருக்க இந்த ஷர்ட்டும் தான் இருக்கு,” என்றான் அபினவ்.
அஹல்யா விரலால் கண்ணீரை சுண்டி விட்டாள். பின்,
“என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் எஸ்.ஐ சார்?” என்றாள்.
“உன் பேரு அஹல்யான்னு தெரியும். மேத்ஸ் டீச்சர்ன்னு தெரியும். உன் பையன் பேரு அருண்ன்னு தெரியும். அருணோட அப்பாவும் நீயும் டைவர்ஸ் வாங்கிட்டீங்கன்னு தெரியும்,” என ஈஸியாகவே பதில் சொன்னான் அபினவ்.
“இதெல்லாமே நான் உங்க கிட்டேயும், மீதி எல்லோர் கிட்டேயும் சொல்லி இருக்க பொய். இதை எல்லாம் நம்பி இப்படி அம்மாவோட தாலியோட வருவீங்களா?”
“நான் முன்னாடியே உங்க கிட்ட சொல்லி இருக்கேன். எனக்கு கடந்த காலத்தை பத்தி கவலை இல்லை அஹல்யா.”
“நான் நல்லவளா கெட்டவளான்னு கூட உங்களுக்குத் தெரியாது?”
“நீ நல்லவன்னு என் மனசு சொல்லுது. எனக்கு அது போதும்.”