கிடைக்காம போனா விட்டுடலாம்னு சொன்னான். நானும் சரின்னு சொன்னேன்.”
மீண்டும் பேச்சை நிறுத்தினாள் அஹல்யா. அபினவைப் பார்த்தாள்.
அபினவ் இப்போது தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் ஏதாவது சொல்வான், கேட்பான் என்று சில நொடிகள் அமைதியாக இருந்தாள். அபினவ் அப்படி எதையும் கேட்காமல் அமைதியாக இருந்தான்.
தொடர்வதா வேண்டாமா என்று தயங்கி விட்டு, சொல்லி முடித்து விடுவது என்ற முடிவுடன் தொடர்ந்தாள்.
“அர்னவ் கிட்ட பட்ட சூடுனால கவனமா இருந்தேன். கௌரவும் ரொம்ப நல்லவிதமா நடந்துக்கிட்டான். நாங்க ஒரு மூவி டீமைப் போய் சந்திச்சோம். அவங்க புது படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தாங்க. ஸ்க்ரீன் டெஸ்ட், ஆக்டிங் டெஸ்ட்ன்னு ஏதேதோ இருந்துச்சு. இரண்டு வாரம் கழிச்சு எனக்கு சான்ஸ் கிடைச்சிடுச்சுன்னு ஃபோன் வந்துச்சு. ரொம்ப சந்தோஷப்பட்டேன். தலை கால் புரியலைன்னு சொன்னா சரியா இருக்கும். கௌரவ் கிட்ட தேங்க்ஸ் சொன்னேன். ட்ரீட் கேட்டான். நோ ன்னு எப்படி சொல்றதுன்னு ஒரு காஃபி ஷாப்ல சந்திக்கலாம்னு சொன்னேன். அது என் மொத்த வாழ்க்கையையும் தலைகீழ மாத்த போறது எனக்கு அப்போ தெரியாது.”
பழைய ரணங்களால் ஏற்பட்ட வலியினாலோ என்னவோ அஹல்யாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அது அபினவிற்கு தெரியக் கூடாது என்று முகத்தை திருப்பிக் கொண்டு தொடர்ந்தாள்.
“கௌரவ் கூட காஃபி ஷாப்ல டைம் ஸ்பென்ட் செய்துட்டு கிளம்பினப்போ எனக்கு ஒரே தலைவலி. போற வழியில இருக்க மெடிகல் ஷாப்ல தலைவலிக்கு மாத்திரை வாங்கிட்டு போகலாம்னு சொன்னேன். பெயின் கில்லர் தானே என் கிட்டேயே இருக்குன்னு ஒரு டேப்லட் கொடுத்தான். நான் எடுத்துக்குற டேப்லட் கவர் போலவே இருந்துச்சு, ரொம்ப யோசிக்காம அந்த மாத்திரையை சாப்பிட்டேன். அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுனே எனக்கு தெரியாது.