என்ன சத்தம் அது? சக்தியின் புலன்கள் விழித்துக் கொண்டது. ஏதோ விழுந்த சத்தமா?
கவனமாக காதுகளை கூர்மையாக்கி கவனித்தாள்.
வினாடிகள் மெல்ல நகர்ந்தது. ஒரு சத்தமும் கேட்கவில்லை.
மீண்டும் அவள் தூங்க முயன்ற நேரம் யாரோ மெதுவாக நடக்கும் காலடி சத்தம் கேட்டது.
சத்தம் போடாமல் எழுந்து அமர்ந்து காதுகளை தீட்டிக் கொண்டு கவனித்தாள் சக்தி.
காலடி ஓசை பக்கத்தில் இருந்து தான் கேட்டது! பக்கத்து அறையில் யாரோ நடக்கிறார்கள்???
பர்வதம் பாட்டி அங்கே வந்திருக்கும் வாய்ப்பு குறைவு. அவள் இங்கே குடி வந்தப் பிறகு எந்த தேவை என்றாலும் பாட்டி கீழே இருந்து அவளை கூப்பிட்டு கேட்டார்களே தவிர அவர்களே படி ஏறி வந்து அவள் பார்க்கவே இல்லை.
அப்படி என்றால் யார் இது?
யாராக இருந்தாலும் அவள் ஏதேனும் ஆயுதத்துடன் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
காலடி சத்தம் வேறு இப்போது இன்னும் பக்கத்தில் கேட்டது. அவசரமாக யோசித்தாள்.
அந்த அறையில் இருந்த பழைய கிரிக்கெட் பேட் ஞாபகம் வந்தது.
சத்தம் போடாமல் எழுந்து கிரிக்கெட் பேட் இருந்த இடத்தை நினைவுக்கு கொண்டு வந்து இருட்டில் எதையும் இடித்து சத்தம் ஏற்படுத்தாமல் நடந்தாள்.
கதவுக்கு பக்கம் இருக்கும் சுவருக்கு அருகே வந்தப் போது காலடி சத்தம் ரொம்பவும் பக்கத்தில் கேட்டது.