முகம் மாறாமல் காப்பது இந்துவிற்கு மிக கடினமாக இருந்தது. அவள் என்ன முயற்சி செய்தாலும் அவளின் கன்னங்களில் ஏறிய செம்மையை மறைக்க முடியவில்லை. மகளின் முகத்தை பார்த்து விட்டு, அர்ச்சனாவே புன்னைகையோடு தொடர்ந்தார்.
"அன்னைக்கு பிரசாத் விஷயம் உன் கிட்ட சொன்னேன் தானே... சஞ்சீவ் இப்படி மெனக்கெட்டு வந்து அதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்துச்சுன்னு தோணிச்சு... சரி காஞ்சனா கிட்ட பேசிடலாம்னு நினைச்சேன்... ஆனால அவ தான் சஞ்சீவுக்கு ஏதோ முறைப் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்லிட்டாளே..." என்று பெருமூச்சுடன் முடித்தார் அர்ச்சனா.
சில கணங்கள் அமைதியாக இருந்த இந்து,
"ஏம்மா, நான் இன்னைக்கு ஈவ்னிங் எங்கே போனேன்னு தெரியுமா?" என வினவினாள்.
"பீச்சுக்கு போறேன்னு சொல்லிட்டு தானே போன டா..."
"ம்ம்ம்... வந்து ... நான் யார் கூட பீச்சுக்கு போனேன் தெரியுமா?"
இல்லை என்பது போல் தலை அசைத்த அர்ச்சனா, "ஏன்டா செல்லம்???" என்றார்.
சில வினாடிகள் தயக்கத்திற்குப் பிறகு, "அம்மா... வந்து... நான் இன்னைக்கு சஞ்சீவ் கூட தான் பீச்சுக்கு போனேன்..." என்றாள் இந்து.
அர்ச்சனா சற்று ஆச்சர்யமாகப் பார்க்கவும்... உண்மை என்பது போல் தலை அசைத்து விட்டு, அன்று சஞ்சீவிடம் பேசிய விஷயத்தை சுருக்கமாக சொன்னாள் இந்து.
"நான் எதையும் உங்க கிட்ட மறைச்சதில்லை அம்மா.... இந்த விஷயம் எனக்கே குழப்பமா இருந்துச்சு, அதனால தான் சொல்லலை.... இப்போதும் எதுவும் முடிவா சொல்ல முடியாது தான்... ஆனால் உங்களுக்கு தெரிஞ்சிருக்கட்டும்னு தான் சொன்னேன்..."