"ஆனால் இந்துமா... நீ இந்த கண்டிஷன் பத்தி எல்லாம் இப்போவே யோசிச்சிருக்க வேண்டாமோ?"
"இல்ல ம்மா... இது எனக்கு மட்டும் இல்லை... சஞ்சீவுக்கும் தெளிவாக வேண்டிய ஒரு விஷயம் தான்... கொஞ்சம் முன்னாடியே யோசிக்குறது நல்லது தானே... அப்புறம் காஞ்சனா ஆன்ட்டி சொன்ன அந்த முறைப் பொண்ணு வேற இருக்காளே... அந்த விஷயத்திலும் ஆன்ட்டி மனசு மாறனும் தானே..."
"அதுவும் சரி தான்...." என்றார் அர்ச்சனா யோசனையோடு.
அவரின் கைகள் மட்டும் மகளின் தலையை இப்போதும் பாசத்துடன் வருடிக் கொண்டிருந்தது!
தன்னிடம் எதையும் மறைக்காமல் சொல்லும் மகளின் குண நலமும்... எவ்வளவு யோசித்திருக்கிறாள் என்ற எண்ணத்தினால் வந்த பெருமையும் அதில் கலந்திருந்தது!
🌼🌸❀✿🌷
அம்மாவிடம் பேசி விட்டு தன் அறைக்கு வந்து படுத்த பிறகும் இந்துவிற்கு தூக்கம் வரவில்லை. அவளின் மனதினுள் ஏதேதோ எண்ணங்கள், நினைவுகள் தோன்றி அவளை அலைக்கழித்து கொண்டிருந்தது...
அவளை பார்க்கும் போதெல்லாம் முகம் மலரும் சஞ்சீவ்.... அவளை பார்த்த பின் அவன் வாழ்க்கையே மாறி போனதாக சொன்ன சஞ்சீவ்..... வாழ்க்கை துணையாக அவளை உடன் வர கேட்ட சஞ்சீவ்.... அவளின் கன்னத்தில் வருடிய சஞ்சீவ்... அவளின் விரல்களில் முத்தமிட்ட சஞ்சீவ்....
இப்படி சஞ்சீவையே அவள் மனம் சுற்றிக் கொண்டிருந்தது. திடீரென அவளின் செல் ஃபோன் சினுங்கியது. மணி பன்னிரண்டை கட்டாயம் தாண்டி இருக்கும்... இந்த நேரத்தில் மெசேஜ் அனுப்புவது யார் என்று யோசித்துக் கொண்டே ஃபோனை கையில் எடுத்தவள், சஞ்சீவிடம் இருந்து தான் மெசேஜ் வந்திருப்பது தெரிந்துக் கொண்டு முகம் மலர்ந்தாள்.