“அதெல்லாம் அப்புறம்! சின்ன அண்ணி, எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க சொல்லுங்க? அதுக்காக தான் இவ்வளவு நேரமா நான் தூங்காம முழிச்சு உட்கார்ந்திருக்கேன்...” என மது பாரதியிடம் வினவினாள்!
“என் தங்கச்சிக்கு என் மேல் என்ன பாசம்டா சாமி! அண்ணன் மேலே உள்ள பாசத்தில் இப்படி தூங்காமல் இருக்கிறாளேன்னு நானும் கூட கொஞ்சம் நேரம் ஃபீல் செய்தேன்...” என்றான் விவேக்!
“எனக்கு என்னைக்கு ண்ணா உன் மேல பாசம் இருந்திருக்கு இன்னைக்கு மட்டும் வர? சின்ன அண்ணி, நீங்க சொல்லுங்க எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என மீண்டும் பாரதியிடம் ஆர்வத்துடன் கேட்டாள் மது!
“பெரிசா எதுவும் வாங்கலை மது... இது தான் உனக்காக வாங்கினேன். உன் கிட்ட இருக்க சுரிதார் கலர் எல்லாம் வச்சு வாங்கினேன்... உனக்கு பிடிச்சிருக்கா பார்... உமா, உங்களுக்கும் அதே போல் தான், ஆனால் கொஞ்சம் சின்ன செட்...”
அழகிய சிப்பியால் செய்யப்பட்ட பல நிறத்தில் இருந்த காதணி மற்றும் செயின் செட் அது. கல்லூரி செல்லும் மதுவிற்காக பல நிறத்தில் வாங்கியிருந்த பாரதி, உமாவிற்காக அழகிய சிவப்பு நிறத்தில் வாங்கி இருந்தாள்.
“வாவ்!” என மது வியப்புடன் சொல்ல,
“அழகா இருக்கு பாரதி!” என்றாள் உமா விழிகளை விரித்து!
அவர்கள் இருவருக்கும் அவள் வாங்கி வந்திருந்த பொருள் பிடித்ததில் பாரதிக்கும் முகம் மலர்ந்தது.
“இது உங்களுக்கு... இது மாமா உங்களுக்கு... அத்தை இது உங்களுக்கு...” என மற்றவர்களுக்கு வாங்கி வந்ததையும் கொடுத்தாள் பாரதி.