“எனக்கு உன் மனசு புரியுது கற்பகம். விவேக்கோட மனசில உனக்குன்னு இருக்க இடத்தை பாரதி பிடிச்சிடுவாளோன்னு உனக்கு பயம்... நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு... நமக்கு கல்யாணமாகி முப்பத்தி மூணு வருஷமாகப் போகுது, இன்னமும் எனக்கு நீ தான் முக்கியம்னு நான் நினைக்கிறேன். ஆனால் உன்னை விட நம்ம பசங்க தான் முக்கியம்னு நான் நினைச்சா உன்னால் தாங்க முடியுமா?”
“என்னங்க!”
“எனக்கு தெரியும் கற்பகம்... எப்போதுமே எனக்கு நீ தான் எல்லாம். அதே போல் தானே பாரதிக்கு விவேக்கும்? அவளுக்கும் அவளுடைய கணவன் அவள் மேல் அன்பு காட்டனும்னு ஆசை இருக்காதா? விவேக்கிற்கும் பாரதி மேல் அன்பு ஏற்படுவது இயற்கை தானே? பெற்றோர்கள் குழந்தைகளை வழி நடத்தும் ஒரு உறவு. அதுக்கு மேல் ரொம்ப எதிர்பார்க்க கூடாது. ஏதோ நம்ம நல்ல நேரம், நம்ம இரண்டு மருமகள்களும் மரியாதை கொடுக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க... யோசிச்சுப் பார், இன்னைக்கு நீ சொன்னதுக்கு பாரதி மூஞ்சில அடிக்குற மாதிரி பதில் சொல்ல எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்? அப்படியே அவள் சொல்லி இருந்தாலும், அவ மேல தப்புன்னு நாம சொல்ல முடியுமா?”
“...”
“எனக்கு உன்னை தெரியும், புரிஞ்சுக்கவும் முடியும்... தேவை இல்லாம மனசை குழப்பிக்காம, பாரதியையும் ஈஸியா நம்ம குடும்பத்தில் ஒருத்தியா ஏத்துக்கோ. உமா வந்தப்போ நீ இவ்வளவு குழம்பினதா தெரியலையே, இப்போ மட்டும் ஏன்??”
“உமா பாரதி போல் இல்லையேங்க... நான் உங்க கிட்ட சொன்னேனே... சசிரேகா அன்னைக்கு...”
“இது உனக்கு அழகில்லை கற்பகம்! அந்த விஷயத்தை விவேக்கே பெரிசா எடுத்துக்காதப்போ நமக்கு என்ன? பொறாமை பிடிச்ச நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க... அதுக்கு எல்லாம் நாம் என்ன செய்ய முடியும்? இத்தனை நாள்ல பாரதி பண்பாடில்லாமல், கண்ணிய குறைவாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து பார்த்திருக்கீயா? அவ நல்ல பொண்ணு தான் கற்பகம்...