நிரஞ்சனுக்கு சங்கில் செய்யப்பட்ட அழகிய விசிட்டிங் கார்ட் ஹோல்டரும், மாமனாருக்கு சங்கின் நடுவே இதய வடிவில் வண்ணம் தீட்டப்பட்டு அதில் கற்பகம் என பெயர் பொதிக்க பட்ட அழகிய கைவினை பொருளையும், மாமியாருக்கு சங்கில் சிப்பி கொண்டு அழகு படுத்தப் பட்டிருந்த பென் ஸ்டான்டையும் வாங்கி வந்திருந்தாள் பாரதி.
மூன்றுமே அழகாக இருந்தது. நிரஞ்சனும், நரேந்திரனும் உடனடியாக பாரதியை மனமார பாராட்டினார்கள். கற்பகத்திற்கு மட்டும் இப்போதும் சின்ன மருமகளை பாராட்ட மனம் வரவில்லை.
“இது போல சீப்பான ஐட்டம் எல்லாம் நான் யூஸ் செய்வதே இல்லை...” என்றாள்.
விவேக்கும் நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்... பின் மனைவியின் பக்கம் பார்வையை திருப்பிய விவேக், அவள் ஒன்றுமில்லை என்பது போல் கண்களால் சொல்லவும், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
கற்பகத்தின் பேச்சை கேட்டு ஆச்சர்யமாக அவள் பக்கம் பார்த்த நரேந்திரனும் சில வினாடிகளுக்குப் பிறகு, திரும்பி மருமகளை பார்த்தார். பாரதியின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. கற்பகத்தின் பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொண்டவளாக, மதுவிடம் எந்த கலர் கம்மல் எந்த சுரிதாருக்கு சரியாக இருக்கும் என உமாவுடன் சேர்ந்து யோசனை வழங்க தொடங்கி இருந்தாள்.
மேலும் சிறிது நேரம் கதைகள் பேசி முடித்து ஒரு வழியாக ஒவ்வொருவராக தூங்க கிளம்பினார்கள்.
நரேந்திரன் தூங்கப் போவதற்கு முன் அடுத்த நாள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் பற்றி மேலோட்டமாக பார்த்து விட்டு போகலாம் என நினைத்தார். ஆனால், அவரின் ஆஃபீஸ் ரூமுக்கு பக்கத்தில் இருந்த கற்பகத்தின் அறையில் விளக்கு எரிவது கண்ணில் படவும், தன் வேலையை மறந்து மனைவியின் அறைக்குள் சென்றார். அங்கே அவரின் மனைவி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.