”இங்கயா எதுக்கு”
”சொல்றேன் உங்களுக்கும் மூர்த்திக்கும் நடுவுல இருக்கற வித்தியாசத்தை அவளுக்கு புரிய வைக்கிறேன், அப்ப அவனை விட நீங்கதான் பெஸ்ட்ன்னு தெரிஞ்சா ஜானகி மனசு மாறிடுவா”
”அப்படியா இதுவும் நல்லாதான் இருக்கு ஆனா, மூர்த்தியை எப்படி இங்க வரவழைக்கிறது“
”உங்களுக்கு ஜானகி வேணுமா வேணாமா”
”வேணும் வேணும்” என்றான் அவசரமாக அவனின் ஆர்வத்தைக் கண்டு ஒரு நொடி திகைத்தாலும் மறுநொடியே அவள் ஆயாசப்பட்டாள்
”அப்போ அவளுக்காக நீங்க மூர்த்தியை கூட்டிட்டு வரனும்”
”நான் முயற்சி செய்றேன்”
”முடிஞ்சா அவனோட அப்பா அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு வந்துடுங்க“
”அவங்க எதுக்கு இங்க”
”ம் ஜானகி இந்த வீட்ல எப்படி நடந்துக்கறாள்ன்னு மூர்த்தியோட பெத்தவங்க பார்க்கனும், அவளோட நடவடிக்கையை பார்த்து அவங்களுக்கு பிடிக்காம போயிடுச்சின்னா, தன்னால அவங்க தன் பையன் மனசை மாத்தி கூட்டிட்டுப் போயிடுவாங்க, இல்லைன்னா ஜானகிதான் வேணும்னு அவங்க நினைக்கலாம்லயா, முதல்ல அவங்க மனசுல இருந்து ஜானகியை தூக்கனும், பெத்தவங்க சலவை செஞ்சி பேசினா மகன் மாறிடப்போறான், ஜானகியை ஏத்துக்க மாட்டேன்னு மூர்த்தி உறுதியா நின்னு பேசினா ஜானகியும் மனசு மாறிடுவா”
”மூர்த்தி கிடைக்காம போய் அதனால ஜானகி மனசு உடைஞ்சி தப்பா ஏதாவது செய்துக்கிட்டா என்ன செய்றது“