”ஓ அவன் செஞ்ச உதவியை மனசுல வைச்சிக்கிட்டு வியாபாரம் செய்திருக்கீங்க இது உங்களுக்கே நஷ்டம்னு தெரியலையா”
”அட என்னத்தம்மா நஷ்டம் லாபம்னு பார்த்துக்கிட்டு, கொம்பன் யாரும்மா அவனுக்கு உதவறதுல எனக்கெந்த கஷ்டமும் இல்லை, உனக்கு பணம் வந்ததா அதை பாரு” என சொல்ல அவளோ கேட்காமல் காய்க்கு 30 ரூபாய் என வைத்துக் கொண்டு மீதி பணத்தை அவரிடமே தந்தாள்
”என்னம்மா செய்ற நீ”
“நியாயமா வர்ற பணம்தான் ஒட்டும் என்னதான் நீங்க அவன் மேல இருக்கற பிரியத்துல தந்தாலும் இது நிரந்தரம் கிடையாது, நாளைக்கும் அவன் காய்களை விக்க வருவான் இதே போல எத்தனை முறை உங்களால பணம் தரமுடியும்“
”நான்னு இல்லை அங்கிருக்கற எல்லாருமே அவன் கேட்ட விலைக்கு பணம் தருவாங்க”
”தரட்டும் ஆனா அதுக்காக அதிகப்படியான லாபம் வேண்டாமே, ஒரு நல்ல வியாபாரிக்கு சரியான லாபம் வரனும், அளவுக்கு மீறி வந்தா அவனுக்கு அந்த லாபத்து மேல மதிப்பிருக்காது, செய்ற வேலையில ஆர்வம் இருக்காது நான் வரேன்” என சொல்லிவிட்டு கிளம்ப முயல அவரோ தடுத்தார்
”அம்மாடி ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு” என சொல்ல அவளும் நின்று என்னவென பார்த்தாள்
”கொம்பன் சந்நியாசி ஆகிட்டா இந்த ஊருக்கே பெரிய நஷ்டம், அவன் பல நன்மைகளை செய்தவன் இனியும் செய்வான் அதுக்காகதான் அவனை உனக்காக பேசினோம், அதுக்கு உன்னோட கல்யாணத்தை நிப்பாட்டினோம், தப்பு எங்க மேலன்னா எங்களை தண்டிச்சிடு பாவம் கொம்பனை விட்டுடும்மா” என சொல்ல அவளோ இளப்பமாக சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட கொம்பனை நினைத்து வேலாயுதம் கூட வருத்தப்பட்டார்.