எப்படியோ தூக்கிப் போட்டு வச்சிருக்காங்க. என்னவோ நான் ஏதோ புதையலை ஒளிச்சு வச்சிருக்க மாதிரி தேடி இருக்காங்க. சீசர் ரூம், அருண் ரூம் தவிர மத்த எல்லா ரூம்ல இருந்த பொருளும் கீழ இருந்துச்சு!”
“என்ன திருடிட்டுப் போனாங்க?”
“எதுவுமில்லை! அந்த வீட்டுல இருக்க பொருள் எதுவுமே காஸ்ட்லி ஆனது இல்லை. கொஞ்சம் பாத்திரம், துணி மணி தான் இருந்துச்சு!”
“யாரு வந்திருந்தாலும் எதையோ தேடி வந்திருக்குறதா தோணுது!” சக்தி சொன்னது ரொம்பவும் சரி என்று சத்யாவிற்கும் இப்போது தோன்றியது. என்ன தேடி இருப்பார்கள்???
மனதிலிருந்த கேள்வியை நேரடியாக கேட்காமல், “வேற ஏதாவது அங்கே மறந்துப் போய் வச்சிருந்தீங்களான்னு யோசிச்சுப் பாருங்க அஹல்யா,” என்றாள்!
“இல்லை! என் கிட்ட நகைன்னு எதுவும் இல்லை. பணமும் நான் கையில வச்சுக்குறது கிடையாது!”
அஹல்யா சொன்னதைக் கேட்டு தலை அசைத்த சத்யா, “ஒருவேளை வீடு பூட்டி இருக்கவே ஏதாவது இருக்கும்னு நினைச்சு தேடி இருப்பாங்களோ,” என்றாள் சந்தேகத்துடன்!!
“அது தெரியலை. ஆனால், திருட வந்தது யாரா இருந்தாலும், இந்த ஊருக்காரங்க இல்லைன்னு நினைக்குறேன்,” என்றாள் அஹல்யா!
சத்யாவிற்கு அவள் சொன்னது ஆச்சர்யத்தைக் கொடுத்தது!
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“அந்த வீடு இருக்க தெருல மூணு வீட்டுல ஆளு இல்லை. ஊருக்கு போயிருக்காங்க. அவங்க எல்லாம் நல்ல வசதியானவங்கன்னு ஊருல எல்லோருக்கும் தெரியும். திருடனும்னு நினைச்சிருந்தா அந்த வீட்டுக்கு தான் முதல்ல போயிருப்பாங்க!”