அவரிடம் ‘போட்டு கொடுத்தால்’ அவ்வளவு தான்!
ஆனால், அவரின் கோபமும் அவனின் நன்மைக்கு தானே?
தந்தையின் மீது அன்பும், மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த விக்ராந்தின் மனம் தானாகவே அவருக்காக பரிந்தும் பேசியது...
இப்படி பல விதமான எண்ண ஓட்டங்களுடன், வாடகை கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று காரை நிறுத்தி விட்டு, அங்கே இருந்து ஏர்போர்ட் செல்லும் இலவச பஸ்ஸில் ஏறி பிரிட்டிஷ் ஏர்வேஸ் கவுன்டரை அடைந்தான் விக்ராந்த்!
தன் பெட்டிகளை செக்-இன் செய்து விட்டு, பாதுகாப்பு சோதனையை கடந்து, இரண்டு மணி நேரம் ப்ளைட்டிற்காக ‘கேட்டில்’ காத்திருந்து, ஒருவழியாக ஃப்ளைட்டில் ஏறி அமர்ந்தவனுக்கு அப்பாடா என்றிருந்தது... அவன் அருகில் வந்து அமர்ந்த அந்த அமெரிக்க இளநங்கை,
“ஹலோ...” என்று அவனை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தாள்.
🌼🌸❀✿🌷
“ப்ரியாவவுக்கு கை முறுக்கு ரொம்ப பிடிக்குமே, இதில கொஞ்சம் வச்சிருக்கேன் அவக் கிட்ட கொடுத்திருங்க அக்கா...”
“சரி ராஜம்...” என்றபடி ராஜம் கொடுத்த சின்ன பிளாஸ்டிக் டப்பாவை, தன் அருகில் இருந்த பையை திறந்து திணித்து வைத்தாள் வைஜெயந்தி.
“நாளைக்கு கிளம்பினால் நீங்களும் எங்க கூடவே வரலாம்... விக்ராந்த் அமெரிக்காவில் இருந்து வரான். நாங்களும் நாளைக்கு காலையில் சென்னைக்கு தான் கிளம்புறோம்...”
“பரவாயில்லை ராஜம். பஸ்ஸில் டிக்கட் புக் செய்தாச்சு... ப்ரியா வேற காலையிலேயே எதிர்ப்பார்ப்பா... விக்கிராந்தை பார்த்தும் வருஷம் ஆச்சு... சின்ன குழந்தையா பார்த்தது...”