நேரம் அபினவ் கீழே இருந்த பேப்பர் எதையோ கையில் எடுத்தான். முதலில் தேன் அதைக் கண்டுக்கொள்ளவில்லை. அபினவ் அந்த பேப்பரையே பார்த்துக் கொண்டு நிற்கவும் அவன் அருகே சென்றான்.
“என்ன பேப்பர் அது அபினவ்?” தென்றல்வாணன் பெயருக்கு கேள்வி கேட்டு விட்டு அபினவின் கையில் இருந்த பேப்பரை வாங்கினான்.
அது ஒரு ஸ்டாம்ப் பேப்பர். ஏதோ பத்திரத்தின் முதல் பக்கம். அதில் பேனாவில் எழுதப் பட்டு இருந்த அஹல்யா, சேகரன் பெயர்கள் தென்றல்வாணனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கிரையப்பத்திரம் என்ற தலைப்பின் கீழே இருந்த விபரங்களைப் படித்தான். ட்வென்டி ஃபோர்த் க்ராஸ் ஸ்ட்ரீட் என்ற முகவரி இருந்தது. கூடவே எந்த மாவட்டம் போன்ற விபரங்கள் இருந்தது. இது அஹல்யா முன்பு தங்கி இருந்த வீட்டின் அட்ரஸ்??
தென்றல்வாணன் நம்ப முடியாமல் மீண்டும் அந்த ஸ்டாம்ப் பேப்பரில் இருந்த பெயர்களைப் படித்தான். விற்பவர் பெயர் அஹல்யா என்று தான் இருந்தது. வாங்குபவர் பெயர் சேகரன் என்றும் இருந்தது.
அஹல்யா வாடகைக்கு அந்த வீட்டில் தங்கி இருக்கவில்லையா??? அது அவளுடைய சொந்த வீடா??
பல லட்சம் மதிப்புள்ள வீடு அது. அந்த வீடை வாங்கும் அளவிற்கு சேகரனுக்கு பணம் இருக்க வாய்ப்பு இல்லை. அப்புறம் எப்படி அஹல்யாவிடம் இருந்து வாங்க நினைத்தான்?? மிரட்டியா? அஹல்யாவை மிரட்டி வீட்டை எழுதி வாங்கும் அளவிற்கு சேகரனுக்கு என்ன தெரியும்? மும்பையில் நடந்த சம்பவம் பற்றி அவனுக்கும் தெரிந்திருக்க கூடுமோ???
அல்லது ஏதாவது காரணத்திற்காக அஹல்யாவே சேகரனுக்கு அதை எழுதிக் கொடுக்க சம்மதித்தாளா??? எதற்காக?? அவளுடைய பெயரை சேகரன் கெடுக்காமல் இருக்க இருக்குமா?? சேகரன் அஹல்யாவையும் அவனையும் இணைத்து பற்றி தவறாக பேசிக் கொண்டிருந்தது தெரிந்த ஒன்று தானே!!