கண்ணகியும் உறங்காமல் கவலையுடன் இருந்தாள், ஈஸ்வரமூர்த்தியின் உடல்நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது அது தெரிந்தும் கோவலனுக்காக காத்திருந்தார்.
புது வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற அதிர்வில் இருந்த கண்ணகிக்கு கோவலன் மீது கோபம் வராததுதான் ஆச்சர்யமே, தாத்தாவோ கலக்கத்தில் இருந்தார்
”இப்படி செய்துட்டானே இவனை நம்பினேனே இப்படியா மோசம் செய்வான்” என புலம்ப கண்ணகியோ
”தாத்தா அவரை ஏன் திட்டறீங்க, அவர் இடத்தில இருந்து பாருங்க அவரோட நியாயம் புரியும்”
”என்னத்தம்மா நியாயம் வேண்டிக்கிடக்கு“
“பின்ன ப்ளாக்மெயில் செஞ்சி இந்த கல்யாணத்தை நடத்தியிருக்கீங்க, அவருக்கு பிடிச்சிருக்கா அவர் யாரையாவது விரும்பறாரா இல்லையா இதெல்லாம் கேட்க மாட்டீங்களா, எனக்கு நல்லது செய்யப் பார்த்து இப்ப அவருக்கு நிம்மதியில்லாம செய்துட்டீங்களே, நடந்தது விபத்து அதுக்கு காரணம் அவரா இருந்தாலும் அது தெரியாம நடந்தது, அதுக்காக அவர் மேல பழி சுமத்தி பரிகாரம் செய்ய சொல்லியிருக்க கூடாது, அதுக்கு பதிலா வேற ஏதாவது உதவி செய்ய சொல்லியிருக்கலாம், இப்ப பாருங்க காலம் முழுக்க அழியாத பாவம் செய்துட்டீங்க”
”நீ சொன்னது சரிதான் நான் பாவி இந்த பாவியை மன்னிச்சிடும்மா”
”அய்யோ தாத்தா ஏன் இப்படி பேசறீங்க வேணாம்”
”நான் அவன்கிட்ட கேட்டேன்மா, நீ யாரையாவது விரும்பறியான்னு, அவன் இல்லைன்னு சொன்னான் உண்மையை சொல்லியிருந்தா நான் வேற ஏதாவது செய்திருப்பேன்”
”அப்படி அவரு உண்மையை சொல்லியிருந்தா கூட நீங்க இந்த கல்யாணத்தை நடத்தியிருப்பீங்க, எனக்கு நல்லது செய்ய உங்களுக்கு வேற எந்த வழியும் தெரியலையா தாத்தா”