கல்யாணம் செய்துக்கிட்ட அன்னியில இருந்தே நான் நரகத்திலதான் வாழறேன், ஒவ்வொரு முறையும் அவள் என்னை வெறுத்து ஒதுக்கறப்ப என் உடம்பு நெருப்புல எரியற மாதிரி வேதனையாயிருக்கும், அதே வேதனையை நான் இன்னொரு பொண்ணுக்கு தர விரும்பலைம்மா புரிஞ்சிக்கம்மா” என அவன் கெஞ்ச அதில் மங்களம் அமைதியானார்.
அவனது பேச்சு அனைவரையுமே யோசிக்க வைத்தது, மகேந்திரனோ மென்மையாக சிரித்துவிட்டு வேங்கையனிடம்
”எப்ப நீ உன் வேதனை என் பொண்ணு அனுபவிக்க கூடாதுன்னு நினைச்சியோ அப்பவே உன்னோட நல்ல மனசு எனக்குப் புரிஞ்சிடுச்சி, என் பொண்ணை நான் குழந்தையா பார்த்தேன், அவள் காதலிக்கறான்னு கேள்விப்பட்டதும் கோபம் வரலை பயம்தான் வந்தது, எங்க அவள் தப்பான ஆளை தேர்ந்தெடுத்துட்டா அவள் வாழ்க்கை நாசமாயிடுமேன்னுதான் யோசிச்சி பதறிக்கிட்டு இங்க வந்து சேர்ந்தேன், ஆனா இல்லை அவள் சரியான ஆளைதான் தேர்ந்தெடுத்திருக்கா, இனி எனக்கு எந்த கவலையும் பயமும் இல்லை, நான் நிம்மதியா இருப்பேன்” என சொல்ல அதைக்கேட்டும் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தார்கள்.
வேங்கையனுக்கு தலையில் இடி விழுந்தது போலானது, சட்டென மகேந்திரனின் சட்டையை கொத்தாக பிடித்து கோபமாக பேசினான்
”யோவ் அறிவிருக்காயா உனக்கு, படிச்சி படிச்சி சொல்றேன் நீயும் உன் பொண்ணைப் போல புத்திக்கெட்டுப் போய் பேசற, உன் பொண்ணு வாழ்க்கை மேல உனக்கு அக்கறையில்லையா, அவளை நான் கல்யாணம் செய்துக்கிட்டா அவளுக்கு நரக வாழ்க்கைதான் அமையும், புரியுதா இல்லையா” என கத்த அவரோ மென்மையாக சிரித்து அவனது பிடியில் இருந்து தனது சட்டையை விலக்கிக் கொண்டு
”நான் காதலிச்ச பொண்ணு வீட்டுக்குப் போய் அவங்கப்பாகிட்ட பேசினப்ப அவரும் உன்னைப் போலதான் பேசினாரு, நான் அவளை கல்யாணம் செய்துக்கிட்டா அவள் வாழ்க்கை நரகமாயிடும்னு சொன்னாரு, அதுக்கு பேருதான் பாசம், அக்கறை, அதையே நீயும் இப்ப சொல்ற இதுக்கு அர்த்தம் என்ன, நீ என் பொண்ணு மேல பாசமா இருக்கேன்னுதானே அர்த்தம்” என சொல்ல வேங்கையன் திண்டாடினான்.