கிட்டத்தட்ட ராகுலின் உயரம் இருந்த ஐஸ்வர்யாவின் முகம் ‘ரோஸ் பவுடரின்’ உபயத்தினால் ரோஸ் நிறத்தில் மின்னியது! தேவைக்கு அதிகமாக மேக்கப் போட்டு இருந்ததை தவிர ஐஸ்வர்யாவிடம் வேறு எந்த குறையையும் வினாயக்கால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அவனிடம் நட்பாக பேசினாள், பழகினாள்.
வினாயக் ஐஸ்வர்யாவுடன் பேசும் போதெல்லாம் ப்ரியம்வதா மட்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். வினாயக்கிற்கு ப்ரியம்வதா நடந்துக் கொள்ளும் விதம் புரியாததாக இருந்தது.
அந்த பெரிய பங்களாவின் பராமரிப்பு மற்றும் சமையலுக்கு என்று நான்கு வேலையாட்கள் இருந்தார்கள். அந்த நான்குப் பேரின் ராஜ உபசாரத்துடன் வியானாயக்கிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் தடபுடலான விருந்து வழங்கப் பட்டது.
அனைவருடனும் பேசிக் கொண்டு இருந்து விட்டு வினாயக் வீட்டிற்கு கிளம்ப நள்ளிரவுக்கு மேல் ஆகி விட்டிருந்தது.
“மிட் நைட் ஆயிடுச்சே, தனியா போவீங்களா வினாயக்?” கலைவாணி கரிசனத்துடன் வினவினாள்.
“நானே போயிடுவேன் அம்மா!” வினாயக் கலைவாணியிடம் சொல்லி விட்டு அவனை வழி அனுப்ப கலைவாணியுடன் வாசலுக்கு வந்திருந்த ப்ரியம்வதாவை பார்த்து புன்னகை புரிந்தான்!
“அம்மா சொல்றது சரி வினாயக், தனியா போகாதே! எங்க கார் டிரைவர் குமணனை கூட வரச் சொல்றேன்!” ப்ரியம்வதாவும் அக்கறையுடன் சொன்னாள்!
“நான் என்ன கை குழந்தையா ப்ரியம்வதா? எனக்கு எதுக்கு துணை எல்லாம்? இங்கே இருந்து நடந்தா அஞ்சு நிமிஷத்துல வீடு இருக்கு. வேகமா நடந்தா இரண்டே நிமிஷத்துல போயிடலாம். நானே போயிடுவேன்... டோன்ட் வொர்ரி,” என்றான் வினாயக்.