ப்ரியம்வதா அரை மனதுடன் கை அசைத்து அவனை வழி அனுப்பி வைத்தாள்.
இருட்டில் நடக்க தொடங்கிய வினாயக் ப்ரியம்வதாவை பற்றி யோசித்துக் கொண்டே நடந்தான். அவன் மேல அவள் காட்டும் அன்பிற்கும் அக்கறைக்கும் அவன் எப்படி கைமாறு செய்யப் போகிறான்? அவள் மட்டும் அன்று கோர்ட்டிற்கு வராமல் இருந்திருந்தால், இந்நேரம் அவனுக்கு தங்க வீடு என்று ஒன்று இருந்திருக்காது!
திடீரென வினாயக்கிற்கு ரொம்பவும் களைப்பாக இருந்தது. சீக்கிரம் தூங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே மெல்ல நடந்தான்!
🌼🌸❀✿🌷
வினாயக்கிற்கு விழிப்பு வந்தப் போது ரொம்பவும் அயர்வாக உணர்ந்தான். கண்களை திறந்துப் பார்க்க கூட அவனுக்கு கஷ்டமாக இருந்தது. பிரயத்தனப் பட்டு கண்ணைத் திறந்தான். நீல வானம் கண்ணில் பட்டது!
எங்கே இருக்கிறான்? புரியாமல் அசைந்தான். கடினமான ஏதோ ஒன்று அவனின் தலையில் இடித்தது. வலி அதிகமாக இருக்கவே தலையை தடவிக் கொண்டே என்ன என்றுப் பார்த்தான். அது ஒரு பிரமாண்டமான மரத்தின் வேர். எங்கே இருக்கிறான்?
புரியாமல் எழுந்து அமர்ந்தான் வினாயக்! கட்டாந்தரையில் படுத்திருந்தது இப்போது தான் அவனுக்கு புரிந்தது.
ஏன் இங்கே தூங்கினான்???
தலையை பிடித்துக் கொண்டு யோசித்தான். ப்ரியம்வதா வீட்டில் இருந்து கிளம்பியதும், வழியில் களைப்பாக உணர்ந்ததும் ஞாபகத்தில் இருந்தது! ஒருவேளை வழியிலேயே தூங்கி விட்டானா?
கஷ்டப்பட்டு எழுந்து நடந்தான். கால்களை அசைப்பது அத்தனை சுலபமாக இல்லை!