பிரயத்தனப் பட்டு நடந்தான்!
அவன் இருக்கும் இடம் எது என்று அவனுக்குப் பிடிப்படவில்லை. ப்ரியம்வதாவின் வீட்டு எஸ்டேட் உள்ளே வந்து விட்டான் போலிருக்கிறது! பல நூறு ஏக்கர் எஸ்டேட் அது. எந்த திசையில் பார்த்தாலும் மரமும் செடியும் தான் இருந்தது! கலங்க தொடங்கிய மனதை அடக்கிய வினாயக், முயற்சி செய்து யோசித்தான்! எஸ்டேட் உள்ளே என்றாலும் கூட, எப்படியும் எங்கேயாவது சாலை இருந்தே ஆக வேண்டும்! சாலை இல்லாமல் எஸ்டேட்டை எப்படி பராமரிக்க முடியும்! மனதில் நம்பிக்கை தோன்ற, சாலையை தேடி மெல்ல நடக்க தொடங்கினான்.
வினாயக் அரை மணி நேரம் நடந்திருப்பான், ஒரு மண் சாலை அவனின் கண்ணில் பட்டது. அசுவாசத்துடன், அதில் நடக்க முயற்சி செய்தான். அவனின் உடம்பில் எனர்ஜி குறைந்துக் கொண்டே இருந்தது. இன்னும் எவ்வளவு நேரம் நடக்க முடியும் என்று அவனுக்கு கவலையாக இருந்தது!
திடீரென்று பக்கத்தில் எங்கேயோ மோட்டார் சத்தம் கேட்டது.
யாரோ வருகிறார்கள போல் இருக்கிறதே! வினாயக் யோசித்துக் கொண்டே நின்றான். சில வினாடிகளில் ஒரு கார் ஒன்று வருவது தெரிந்தது!
வேகமாக வந்த கார், வினாயக் அருகே சடன் ப்ரேக் போட்டு நின்றது!
காரில் இருந்து ப்ரியம்வதா இறங்கி ஓடி வந்து வினாயக்கை சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.
“எங்கே போயிட்ட வினாயக்? பயந்தே போயிட்டேன். சொல்லிட்டு போயிருக்க கூடாதா??”
ப்ரியம்வதா படப்பட என பேச, வினாயக்கிற்கு தான் ஒன்றும் புரியவில்லை!.
“எதுக்கு இந்த டென்ஷன் ப்ரியம்வதா? ஒரு நாள் நான் சில மணி நேரம் அதிகமா தூங்க கூடாதா? உங்க வீட்டு டின்னர் அபாரம். சாப்பிட்ட உடனே தூக்கம் கண்ணை கட்டிடுச்சு!”