தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
61. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அர்ச்சனா மறுநாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து சேர்ந்தாள். சேகர், நந்தினி, வீணா, லக்ஷ்மி, கல்பனா என அனைவரும் அவளுடனே வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
சேகர் சிறிது நேரத்தில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி சென்றான். நந்தினி, அர்ச்சனா - லக்ஷ்மி - கல்பனா என போன தலைமுறையினரின் பேச்சை கேட்டப் படி அமர்ந்திருந்தாள். ஆனால், அர்ச்சனாவின் அருகிலேயே தான் இருந்தாள்! இப்போது என்று மட்டும் இல்லாமல், அர்ச்சனா ஹாஸ்பிட்டலில் இருந்தப் போதும் அவரை பார்க்க வந்த நேரங்களில் எல்லாமே அப்படி தான்! பழைய நாட்களாக இருந்திருந்தால், இந்து கோபத்தில் பொங்கி இருந்திருப்பாள்! ஆனால், இப்போது அவளுக்கு அது தவறாக தெரியவில்லை.
இந்துவும் வீணாவும் தனியாக அமர்ந்து பொதுவாக ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார்கள். மற்ற நாட்கள் போல அல்லாமல், ஏனோ வீணா அன்று சஞ்சீவின் பேச்சை எடுக்கவே இல்லை. வீணாவின் பேச்சை கேட்டப் படி இருந்தாலும், சஞ்சீவின் பேச்சை அவள் எடுக்க மாட்டாளா என இந்துவிற்கு மனதில் கொஞ்சம் ஏக்கமாக இருந்தது! சஞ்சீவ் பற்றி யாரிடமேனும், ஏதாவது ஒரு காரணத்திற்காக அவள் பேச விரும்பினாள். அவனை விட்டு விலகி செல்வது என்று முடிவு எடுத்து விட்டப் படியால், அவளாக அவன் பேச்சை தொடங்க முடியவில்லை. வீணாவோ இந்துவின் மனநிலை அறியாமல், அவர்கள் சென்றிருந்த சிம்லா, டார்ஜிலிங் சுற்றுலா பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.
மும்முரமாக எதையோ சொல்லிக் கொண்டிருந்த வீணா, இந்துவின் கவனம் அங்கே இல்லை என்பதை புரிந்துக் கொண்டாள்.
"என்ன இந்து, ஏதோ ரொம்ப யோசனையில் இருக்க போல," என்றாள் கிண்டலாக.
இந்துவிடம் இருந்து பதில் வரவில்லை. தோழி சொல்வதை கவனித்தால் தானே அவள் பதில் சொல்ல! வீணா சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஒருவழியாக, வீணா அமைதியாக இருப்பது இந்துவின் கவனத்தில் பட்டது, அவசரமாக தன்னை சுதாரித்துக் கொண்டு,
"நல்ல ட்ரிப் வீணா..." என்றாள் பொதுப்படையாக!