தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
64. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இந்துவிற்கு சஞ்சீவுடன் தனியாக பேச தயக்கமாக தான் இருந்தது. ஆனால், அவளுக்கும் அவனிடம் பேச வேண்டிய விஷயம் இருந்ததால், சஞ்சீவை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் அறை இருந்த மாடி பக்கம் திரும்பினாள்.
செய்தி புரிந்தவனாக சஞ்சீவ் எழுந்து அவளருகில் வந்தான். இந்துவின் பக்கத்தில் நின்றிருந்த வீணா, இரண்டுப் பேரையும் பார்த்து,
"எனக்கு தெரிஞ்ச வரைக்கும், உங்க ரெண்டு பேரையும் இப்படி தனியா பேச விடுறது தப்பாச்சே! என்ன சஞ்சீவ் சார் சொல்றீங்க???" என்றாள் கேலியாக!
சஞ்சீவ் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்,
"சரி சரி பயப்படாதீங்க, நீங்க பேசிட்டு வாங்க! ஆனால் சரியா பதினஞ்சு நிமிஷம் தான் உங்களுக்கு டைம். சரியா???" என்றாள் வீணா இப்போதும் கிண்டலாக.
சஞ்சீவ் சரி எனும் அர்த்தத்தில் தலையை ஆட்டிவிட்டு, மாடி ஏற தொடங்கி இருந்த இந்துவை பின் தொடர்ந்து சென்றான்.
இந்துவின் அறை சஞ்சீவ் எதிர்பார்த்திருந்ததுப் போலவே சுத்தமாக இருந்தது. ஒவ்வொரு பொருளுமே இருக்க வேண்டிய சரியான இடத்தில் இருந்தது.
என்ன தான் இந்து மேலே அவனுக்கு கோபமிருந்த போதும், அந்த அறைக்குள் நுழைந்த உடனேயே அவனுள் ஒருவிதமான மயக்கம் ஏற்பட்டது.
அந்த அறையில் இருந்த பால்கனி பக்கம் சென்ற இந்து, அங்கே இருந்த சோஃபாவை காண்பித்து அவனை அமர சொன்னாள். அவன் அமரவும், அவளும் அவனுக்கு நேர் எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
சில வினாடிகள் அமைதியில் கரைந்தது!