தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 34 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மகிழ்ச்சியும் கலாட்டவுமாக கீதா, விஜயின் திருமண ஏற்பாடுகள் நடக்க, அவர்களின் திருமண நாளும் நெருங்கி கொண்டே இருந்தது!
தியாகு சொன்னதுப் போல கீதாவிற்கு பெற்றோர் மீது பாசமில்லாமல் போகவில்லை என்றாலும் கல்யாணம் என்று ஒன்று நிச்சயித்த நாள் முதலாகவே அவளுள் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது. கூடவே, எதிர்கால வாழ்க்கையை பற்றிய கலர் கலர் கனவுகள் வேறு!
அதிலும் விஜய் அவளிடம் காண்பித்த ஆர்வம்! அவனின் பேச்சில் நிறைந்து இருந்த அன்பு! அவன் அவளை மதிப்பு கலந்த கனிவுடன் நடத்திய விதத்தில் தெரிந்த அவனின் நற்குணம், என எல்லாமுமாக கீதாவினுள் பல பல கோடி வண்ண கனவுகளை அள்ளி தெளித்திருந்தது.
விஜயை அவளுக்கு பரிச்சயமாகி சில மாதங்களாக மட்டும் தான் ஆகிறது என்பதை அவளால் இப்போது நம்பக் கூட முடியவில்லை! அந்த அளவிற்கு அவன் அவள் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிப் போய் இருந்தான். அந்த அளவிற்கு விஜயின் அன்பினால் அவளின் தலை கிறுகிறுத்துப் போயிருந்தது!!!
இந்த காதல் எத்தனை விசித்திரமானது!
அதுவும் அவர்கள் இருவர் விஷயத்தில், பெற்றோரின் சம்மதத்திற்கு பின் வந்த உறவு என்பதால் கீதாவின் இந்த அன்பில் உரிமையும் நிறைந்திருந்தது.
ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு யுகமாக செல்ல, ஒருவழியாக ‘ஸ்லோ-மோஷனில்’ அவர்களின் திருமண நாள் வந்து சேர்ந்தது!
திருமண நாளின் பரபரப்பும், கிறுகிறுப்பும், கிளுகிளுப்பிலும் கீதா தலை சுற்றிப் போயிருந்தாள்.
மணமேடையில் விஜய்யின் அருகே வந்து அமர்ந்தப் போது அவளுள் இருந்த பரபரப்பையும் மீறி மனதினுள் பெருமையும் மகிழ்ச்சியும் கலந்து பொங்கின. இவன் என்னுடையவன்!