இரண்டாம் மாடிக்கு செல்ல லிஃப்ட் பட்டனை அழுத்தி விட்டு காத்திருந்தான். காலையில் கீதா, விஜய் திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்திருந்தது! அன்று மாலையில் ரிசப்ஷன்! ரிசப்ஷனுக்காக மண்டபத்தை அலங்கரிக்க ஆர்டர் செய்திருந்த பூ இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அதைப் பற்றி விசாரித்து விட்டு வந்திருந்தான்! பூ வந்து சேர தாமதமாகுமாம்! எப்படி சமாளிப்பது...
“ஹலோ! அறிவிருக்கா உங்களுக்கு?”
வெகு அருகே கேட்ட கோபமான பெண் குரலில் யோசனையை விட்டு வெளி வந்து குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தான் தியாகு.
ருத்ரமாதேவியை போல ருத்ரம் பொங்க அங்கே ஒருத்தி நின்றிருந்தாள்! அவள் அவனை பார்ப்பதாக தான் தோன்றியது! ஆனால் அவள் ஏன் அவனை கோபமாக பார்க்கிறாள்?
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மனசுல? குரங்கு மூஞ்சியாமே, குரங்கு! நீங்க என்ன பெரிய ஆமீர் கானா? எல்லாம் நினைப்பு தான்! உன் மூஞ்சி தான் கொரில்லா, சிம்பன்சி, ஒரங்குட்டான்!”
அவள் மூச்சு விடாமல் அவனைப் பார்த்து கத்த, தியாகு இவள் என்ன லூசா என்பது போல அவளைப் பார்த்தான்.
அதுவரை கொஞ்சம் தள்ளி நின்றிருந்த இரண்டு இளவயது பெண்கள் வேக நடையுடன் வந்து அவன் முன் நின்றிருந்த ‘ருத்ரமாதேவி’யிடம்,
“அக்கா, இவர் இல்லை, அங்கே இருக்காங்க பாருங்க,” என்று மெல்லிய குரலில் சொல்லி, எதிர் திசையில் சுட்டிக் காட்டினார்கள்.
தியாகுவின் கண்களும் தானாக அவர்கள் சுட்டி காட்டிய திசையில் சென்றது! அங்கே நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பார்த்த உடனேயே அவனுக்கு விஷயம் புரிந்துப் போனது. ஈவ் டீஸிங்!