தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 43 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அன்று, அங்கே, அந்த வினாடியில் ஆரம்பித்த தியாகுவின் கீர்த்தி மீதான காதல், நான்-ஸ்டாப்பாக தொடர்ந்துக் கொண்டே போனது!
திருமண கூட்டத்தில் இருந்தாலும் அவனின் கண்கள் கிருத்திகாவையே தேடி தேடி தொடர்ந்துக் கொண்டே இருந்தது!
அன்று மாலையில் ரிசப்ஷனுக்காக மஜெந்தா நிற சேலையில் அவள் வந்தப் போது தியாகு அசந்துப் போனான். அதுவரை பெண், காதல், அழகு, சேலை எக்ஸட்ரா எக்ஸட்ரா என எதையும் யோசிக்க கூட செய்யாமல் இருந்தவன், இப்போது கிருத்திகாவையும், புது சேலையில் சுடராக ஜொலித்த அவளின் அழகையும் பார்த்து மதி மயங்கி போய் நின்றான்! மற்றவர்கள் முன்பு நாகரிகமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் அவ்வப்போது கஷ்டப்பட்டு அவனின் பார்வையை திருப்பினாலும், மீண்டும் மீண்டும் அவனின் கண்கள் அவளிடமே சென்று நின்றன!
அதிர்ஷ்டவசமாக கிருத்திகா ஒரு முறை அவனுக்கு எதிரே வரவும், வாய்ப்பை விடாமல்,
“ஹாய்,” என்று பேச்சை தொடங்கினான் தியாகு!
பதிலுக்கு எதுவும் சொல்லாது, அவனை யார் நீ என்பது போல ஒரு பார்வை பார்த்தாள் கிருத்திகா.
அதைப் பற்றி கவலைப் படாமல், “என்னங்க காலையில என்னைப் பார்த்து குரங்குன்னு சொல்லிட்டீங்க? அதுவும் ஒரே ஒரு குரங்கையா சொன்னீங்க? குரங்குகளோட மொத்த ஃபேமிலி பேரெல்லாம் வேற என்னைப் பார்த்து சொல்லிட்டீங்க!!!” என்றான் தியாகு!
புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக கிருத்திகாவின் கண்களில் சின்ன மின்னல் வந்துப் போனது.
“தப்பு தான்! அந்த குரங்குங்க ரொம்ப கோவிச்சுக்க போகுதுங்க,” என்றாள் அவள் நக்கலாக.