தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 41 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வர்ஷாவிற்கும் அம்மாவிற்கும் ‘பை’ சொல்லி அழைப்பை துண்டித்து ஃபோனை மேஜை மீது வைத்த விக்கிராந்த், சில வினாடிகள் மொபைலையே யோசனையாகப் பார்த்தான்.
ப்ரியாவிடம் உடனே பேசலாமா வேண்டாமா என்றக் கேள்வி அவனை அலைக்கழித்தது!
மதிய நேரம் என்பதால் ப்ரியாவிற்கு லஞ்ச் ப்ரேக் ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று முடிவு செய்து மீண்டும் ஃபோனை கையில் எடுத்து அவளின் எண்ணை அழைத்தான். வர்ஷா சொன்னது போலவே மறுப்பக்கம் ரிங் போனதே தவிர எடுக்கப் படவில்லை.
விக்கிராந்த் அதைப் பற்றி யோசிக்கும் போதே, பக்கத்தில் ஒரே ஆரவாரம் கேட்டது. எழுந்துப் பார்த்த விக்கிராந்த், அங்கே சரவணனை கண்டு ஆச்சர்யப் பட்டான்.
விக்கிராந்தின் பக்கத்து க்யூபில் இருந்த ஜான்வியும் சரவணனைப் பார்த்து திகைத்துப் போனாள். எழுந்து நின்றவள் விக்கிராந்த் பக்கம் கேள்வியாகப் பார்த்தாள். பதில் தெரியாது என்ற அர்த்தத்தில் தலையை அசைத்தான் விக்கிராந்த்!
சரவணன் சின்ன சிரிப்புடன் அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே வந்தான்.
"டேய் சரோ, என்னடா ஒரே நாள்ல ஆஃபிஸ் வந்துட்ட? ஒரு மாசம் லீவ் இரண்டு மாசம் லீவ்வுன்னு ஏதேதோ கதை சொன்ன?"
"என்னடா வீட்டை விட்டு துரத்திட்டாங்களா?"
ஜான்வி, விக்கிராந்த் இருவரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்க, சரவணன் மறுப்பாக தலை அசைத்து சிரித்தான்!
"நல்ல ஃப்ரெண்ட்ஸ் நீங்க! யாரும் துரத்தவுமில்லை, என் ப்ளான்ல எந்த மாற்றமும் இல்லை! சர்வர் லாகின் பாஸ்வர்ட் கேட்டு ஒரே ஃபோன் மேல ஃபோன்! வீட்டுல இருந்து எத்தனை தடவை சொல்றது, அதான் நானே நேரா வந்து ஷேர் செய்யலாம்னு நினைச்சேன்!"