தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 45 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
செவ்வந்தி சல்லடைப் போடாத குறையாக தியாகுவிற்கு பெண் தேடினாள்!
தியாகு அதற்கு எந்த விதத்திலும் தடை சொல்லவில்லை. நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.
மாதங்கள் மெல்ல நகர, குமரேசன் செவ்வந்தியிடம் பேசினார்.
“இப்படியே இன்னும் எவ்வளவு நாள் தேடப் போற? அதுக்குள்ளே தியாகு சொன்ன பொண்ணுக்கே கல்யாணம் ஆகிடப் போகுது!”
“நான் என்னங்க செய்ய? ஒவ்வொரு பொண்ணு கிட்டேயும் ஏதாவது குறை இருக்கு!”
அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த தியாகு சிரித்தான்.
குமரேசன் அவனின் சிரிப்பினால் கவனத்தை திசை திருப்பாமல் மனைவியிடம் பேச்சை தொடர்ந்தார்!
“நீ சொல்றது தப்பு செவ்வந்தி. யார் கிட்டேயும் எந்த குறையும் கிடையாது. தப்பெல்லாம் தேடுற உன் கண்ணுல தான் இருக்கு. நீ தியாகுக்கு பிடிச்ச பொண்ணை விட உசத்தியா பொண்ணு வேணும்னு தேடுறது, பிள்ளையார் அம்மா மாதிரி பொண்ணு வேணும்னு தேடுன கதை மாதிரி தான் இருக்கு. நீ இப்படியே அடம் பிடிச்சுட்டு இருந்தா, அப்புறம் உன் மகனும் அப்படி தனியா இருக்க வேண்டியது தான்!”
“என்ன நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“பின்னே வேற எப்படி பேச? தியாகு கல்யாணமே வேண்டாம்னு சொல்றான்னு புலம்பிட்டு இருந்த! அப்படி பட்டவன் ஒரு பொண்ணை பிடிக்குதுன்னு சொன்னா சந்தோஷப் படாம வேற ஒரு பொண்ணு பார்க்குறேன்னு நீ கிளம்பினா எப்படி? அவன் சொல்ற அந்த பொண்ணு செல்லமா வளர்ந்த பொண்ணு, அவ்வளவு தானே? அவனே பிடிச்சிருக்கு அட்ஜஸ்ட் செய்துக்குறேன்னு சொல்றான்! அப்புறம் உனக்கென்ன?”