இந்து இயற்கையாகவே கலகலப்பானவள் தான். இடையில் நடந்த ஒரு சில சம்பவங்களால் அவளின் இயல்புக்கு மாறாக இருந்தாள். பின் சஞ்சீவ் எங்கே அவளை வெறுக்க துவங்கி விட்டானோ என்ற கவலை வேறு... இப்போது அவளுக்கு அந்த கவலை எதுவும் இல்லை. என்ன தான் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் சஞ்சீவிற்கு அவள் மேல் இருக்கும் அன்பின் மேல் நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், அவளுக்கு மனதில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கணவனை விட்டு தள்ளி இருப்பது வருத்தம் என்ற போதும், இது அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகமாக புரிந்துக் கொள்ள உதவும் என்று அவள் நம்பினாள். அதுவும் இல்லாமல் இந்த தள்ளி நிற்கும் கண்டிஷன் கல்யாணத்தை தொடங்கி வைத்தவன் அவன் தானே, அவனாக இறங்கி வரட்டும் என்றும் நினைத்தாள்!
அதனாலேயே மற்றவர்களிடம் இயல்பாக பேசி பழகியவள், சஞ்சீவிடம் மட்டும் தேவைக்கு மட்டுமே பேசினாள்!
🌼🌸❀✿🌷
அன்று சஞ்சீவ் ஏதோ வேலை நிமித்தமாக காலை உணவை சீக்கிரம் முடித்து விட்டு கிளம்பி இருந்தான். தன் அறையில் இருந்து வந்த காஞ்சனா, பேப்பர் படித்துக் கொண்டிருந்த இந்துவிடம்,
"இந்து, கீதா எங்கே? சாப்பிடலாமா?" என்றாள்.
"சாப்பிடலாமே அத்தை... இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச புட்டு... கீதா அக்கா இப்போ தான் ராஜீவ் கிளம்ப ஹெல்ப் செய்றேன்னு சொல்லிட்டுப் போனாங்க," என்றாள் இந்து.
"ஓஹோ!!! சரி," என்ற காஞ்சனா, கிச்சன் பக்கம் திரும்பி கலாவை அழைத்தாள்.
"என்னம்மா..." என்றப்படி உடனே வந்து நின்றாள் கலா.
"கலா, மாடிக்குப் போய் கீதாவையும் ராஜீவையும் சாப்பிட கூட்டிட்டு வா..."