முகத்தில் மகிழ்ச்சி வழிய நின்ற மனைவியைப் பார்த்த சஞ்சீவ்,
"இது உனக்காக இல்லை... உன் அம்மாவுக்காக..." என்றான்.
"தேங்க்ஸ்... ச.... தேங்க்ஸ் ங்க..."
இந்து அவன் பேரை சொல்ல தொடங்கி நிறுத்தி விட்டு, மரியாதையாக முடித்ததை கேட்டு சஞ்சீவிற்கு இனிமையாக இல்லை. ஆனால் அதைப் பற்றி பேசாமல்,
"பார்த்து வர வேண்டியது தானே, அப்படியா வந்து டேபிள்ல இடிக்குறது? தேய்ச்சு விட்டீயா???" என்றான்.
அவன் எதைப் பற்றி சொல்கிறான் என்றுப் புரியாமல் விழித்தாள் இந்து.
"என்ன அதுக்குள்ளே மறந்துப் போச்சா? அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் வந்து டேபிள்ல இடிச்சுக்கிட்டியே அதை தான் சொல்றேன்... இந்தா இதை போட்டு தேய்ச்சு விடு..."
ஏதோ தைலத்தை அவள் கைகளில் கட்டாயப்படுத்தி திணித்து விட்டு தன் பக்க அறைக்குள் சென்றான் சஞ்சீவ்.
சில பல நிமிடங்களுக்கு முன் கால் முட்டியில் இடித்துக் கொண்டது, இப்போது தான் வலி தெரிந்தது அவளுக்கு!!! அதுவரை அவளுக்கு அந்த நினைவு கூட இல்லை. கையில் இருந்த தைலத்தை பார்த்தவளுக்கு, சஞ்சீவின் பரிவு புரிந்தது! அவன் அவளின் சஞ்சீவ் தான்... அவள் சின்னதாக வருந்தினால் கூட அவனால் தாங்க இயலாது!
கடந்த சில சில நாட்களாக மனதில் இருந்த வருத்தம், சோர்வு எல்லாம் காணாமல் போய் விட, மீண்டும் பழையப் படி அவள் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. அவளின் ட்ரேட்மார்க் புன்னகை இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. ஒரு துள்ளலோடு தன் அறைக்குள் சென்றவள், மனதில் இருந்த மகிழ்ச்சியை வேறு யாரிடமும் வெளிப் படுத்த வழி இல்லாததால், தன் டைரியை எடுத்து எழுத தொடங்கினாள்.