தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 07 - சசிரேகா
ஆபீஸ் முடிந்ததும் ரோஜா தனது வண்டியில் ஏறிச் செல்ல அவளை பாலோ செய்தான் ஆனந்த் தனது காரில்.
வெங்கியோ ஆனந்தின் செயலால் மிகவும் குழம்பியபடியே தனது வீட்டிற்குச் சென்றான்
ரோஜா வீட்டை அடைவதற்குள் அங்கு அவளின் வீட்டின் முன் பெரிய மக்கள் கூட்டமே கூடிவிட்டது. என்னவென பார்க்கச் சென்றாள் அங்கு
”இதெல்லாம் அநியாயம், நாங்களும் மனுஷங்க தானே இப்படியா நடந்துக்குவீங்க” என தாத்தா பேச ரோஜா அவசர அவசரமாக தாத்தாவிடம் சென்று
”என்னாச்சி தாத்தா” என கேட்க
”இந்த அநியாயத்தை நீயே கேளு ரோஜா, இவங்க பங்களால இருந்து கழிவு நீரை கொண்டு வந்து நம்ம வாசல்ல ஊத்தறாங்க கேட்டா நம்ம வீடு சாக்கடையாம் அவங்களை என்ன சொல்றுதன்னு தெரியலை நியாயம் கேட்கப் போனா அசிங்க அசிங்கமா பேசறாங்க ரோஜா” என கண்கள் கலங்க சொல்ல அவளுக்கு ஒரே கோபம், அவர்களிடம் பேச எத்தனைக்கையில் உள்ளே புகுந்தான் ஆனந்த். அவனின் வரவை அவளே எதிர்பார்க்கவில்லை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
”என்ன பிரச்சனை இங்க” என அதிகாரமாக கேட்க அங்கிருந்த ஒருவனோ
”ஹலோ ஆனந்த் நீங்க என்ன இந்த பக்கம்”
”எங்க ரிலேஷனை பார்க்க வந்தேன்”
”ரிலேஷனா“ என இன்னொரு பணக்காரன் கேட்க அதற்கு ஆனந்தோ இயல்பாக பேசினான்
”ஆமாம் இந்த வீட்டு பையனைதான் எங்க அக்கா கல்யாணம் செய்திருக்காங்க இது எங்க சம்மந்தி வீடு“