வீட்டுக்கு போயிடுவேன் ஆனா நீங்க அப்படியா”
”நிறுத்து இதுக்கு அப்புறம் இந்த தெருவுக்கு வர்ற வேலையை வைச்சிக்காத சரியா“
”அதெல்லாம் அப்புறம் கதை பேசாம சாப்பிடுங்க மாமா” என சொல்லிவிட்டு அவன் ரசித்து ருசித்து சாப்பிட வெங்கியோ நொந்தபடியே சாப்பிட்டு முடித்தான்.
இருவரையும் ஒன்றாக அமரவைத்து தாத்தாவும் பாட்டியும் மற்றவர்களும் பேசலானார்கள் ரோஜா மட்டும் அவர்களுடன் கலந்துக் கொள்ளாமல் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். தாத்தாவோ வெங்கியிடம்
”வெங்கி உன் மச்சானை எங்களுக்கு நீ காட்டவேயில்லையே, ஆனந்த் எவ்ளோ அழகா பேசறாப்ல தெரியுமா, எங்களோட பல நாள் பிரச்சனையை ஒரு நிமிஷத்தில தீர்த்து வைச்சிட்டாப்ல, அதுக்காக சின்ன சின்ன பொய் சொல்லியிருந்தாலும் எங்களுக்காகதான் அவர் சொல்லியிருக்காரு, அதை நினைக்கறப்ப பெருமையா இருக்கு வெங்கி” என சொல்ல ஆனந்தோ கூச்சத்தில் உடல் நெளிந்து
”என்னை பாராட்டாதீங்க, எனக்கு கூச்சமா இருக்கு நான் என்ன யாருக்கோவா செய்தேன், உங்களுக்குத்தானே நீங்க யாரு எங்க மாமாவோட சொந்தங்கள் அப்ப நானும் உங்க சொந்தக்காரன்தானே அப்படித்தானே” என அனைவரையும் பார்த்து கேட்க அவர்களும் ஆமாம் ஆமாம் என தலையாட்டி வைக்க வெங்கி கடுப்பானான்
”சரிங்க தாத்தா நேரமாகுது நாங்க இன்னொரு நாள் வரோம், இப்ப கிளம்பறோம்” என சொல்லி விட்டு எழுந்து ஆனந்தை பார்க்க அவனோ இப்போது எழுவதாக இல்லாமல் சட்டமாக அமர்ந்து இருக்க
”வா கிளம்பலாம்“
”அட இருங்க மாமா வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க, தூங்கதானே போறீங்க இங்க பாருங்க எவ்ளோ ஆளுங்க இருக்காங்க, இவங்களோட பேசினாலே மனசு முழுக்க சந்தோஷமா இருக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாம் உட்காருங்க மாமா”