தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 53 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நாட்கள் செல்ல செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் கிருத்திகா...
எப்போதும் அவளிடம் அன்பாக இருக்கும் பெற்றோர் மற்றும் அண்ணன்களுடன், செவ்வந்தியும் இப்பொழுது அவளை விழுந்து விழுந்து சீராட்டினாள்! தியாகுவோ கிருத்திகா மேல் தூசு கூட படாதது போல பொத்தி பொத்தி பாதுகாத்தான்...
சுருக்கமாக சொன்னால், ஏற்கனவே செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருந்தவளை, இன்னும் அதிக செல்லம் கொடுத்து குட்டி சுவராக மாற்ற அனைவருமாக முயன்றுக் கொண்டிருந்தார்கள் :-).
அதிலும் தியாகுவை பற்றி சொல்லவே வேண்டாம்... கிருத்திகாவிடம் காதல் மழை பொழிந்ததோடு மட்டுமில்லாமல், எல்லா விதத்திலும் அவளுக்கு பிடித்தவனாகவும் நடந்துக் கொண்டான்...!
கிருத்திகா ஆஃபிஸ் செல்ல தொடங்கியும் சில மாதங்கள் ஆகி இருந்தன...
ஆஃபீஸில் பழைய டெரர் கிருத்திகாவாகவே மெயின்டெய்ன் செய்தவள், வீட்டில் தியாகுவிடம் மட்டும் அன்பு மனைவி கிருத்திகாவாக மாறி இருந்தாள்.
அன்றும் ஆஃபீஸில் முக்கியமான ஈமெயிலை மும்முரமாக டைப் செய்துக் கொண்டிருந்தவள், மொபைல் மெல்ல சத்தம் போடவும் அதை கையில் எடுத்தாள். அழைப்பது தியாகு என தெரியவும், முகம் மலர, அழைப்பை ஏற்று, “என்ன ராஜ்,” என்றாள் கொஞ்சலாக!
“சொன்னா நம்ப மாட்ட கீர்த்தி, இன்னைக்கு ஈவ்னிங் ஐபிஎல் மேட்ச்க்கு டிக்கட் வாங்கிட்டேன்!”
கிருத்திகா எழுந்துக் குதிக்காத குறையாக துள்ளினாள்! சென்னையில் நடக்கும் ஐபிஎல் ஃபைனல் மேட்சை பார்க்க அவள் ரொம்பவே ஆர்வம் கொண்டிருந்தாள். எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்ட டிக்கெட் அவளுக்கு கிடைக்கவில்லை! அவளுக்கு வருத்தமாக இருந்தது.