"ஓகே..." என்றாள் இந்து!
அவள் கோபப் படுவாள் அல்லது அவன் இறங்கி வந்ததை உணர்ந்து சந்தோஷப் படுவாள் என்ற எதிர்பார்ப்போடு இருந்த சஞ்சீவுக்கு, அவள் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் அமைதியாக இருக்கவும், குழப்பமாக இருந்தது. இந்துவை பார்த்தவன், அவளின் கண்கள் அந்த இடத்தில் எதையோ தேடுவதைப் போல் சுழல்வதை கண்டு,
"என்ன?" என்றுக் கேட்டான்.
அவன் முகத்தை பார்த்து அவனின் கேள்வியை புரிந்துக் கொண்டு,
"என் செல் ஃபோன் காணும்.... இங்கே தான் எங்கேயோ இருக்கனும்..." என்றாள் இந்து.
ஒரு கணம் தயங்கி விட்டு, காலையில் அவளின் மொபைலை வைத்த இடத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தான் சஞ்சீவ். அதை வாங்கி கொண்ட இந்து, அப்போதும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனைப் பார்த்தாள். உனக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வியும் கேட்காமல், ஏன் எடுத்து வைத்தாய் என்று கோபமும் படாமல் நின்றவளிடம் என்ன சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை.
எம்.பி.ஏ படித்தவன், பேச்சாற்றலில் சிறந்தவன் என்று பெயர் வாங்கியவன், கிளையன்ட் மனதில் இருப்பதை உணர்ந்து பேச்சிலேயே கவர்பவன், மிக விரைவாக திறமையால் தொழிலும் முன்னேறி கொண்டிருப்பவன், மனைவியின் மனதில் இருப்பதை அறிந்துக் கொள்ள முடியாமல், அவளிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று புரியாமல் திகைத்து நின்றான்.
சஞ்சீவ் பேசுவான் என்பது போல் காத்திருந்த இந்து
{/f90filter}
, அவன் அமைதியாகவே இருக்கவும்,
"சரி நான் போகட்டுமா?" எனக் கேட்டாள்.
ஆம் என்பது போல் அவன் தலை அசைக்கவும், மின்னலென அவள் அறைக்குள் சென்றாள் இந்து.