அதனால் என்ன?
காதல் எதனால் ஏற்படுகிறது? பல பல கோடி ஆண்களும், பெண்களும் இருக்கும் போது, எதனால் அந்த ஒருவர் மீது மட்டும் தனி அபிமானம் தோன்றுகிறது?
இதற்கெல்லாம் பதில் யார் சொல்ல முடியும்!
உதயின் மனதில் அன்றும் இன்றும் என்றும் இருப்பவள், இருக்க போகிறவள் நந்திதா... நந்து... அவனின் நதி தான்... அவள் மட்டும் தான்!
சந்தோஷினால் மனதில் ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு வருபவளின் மனதை அவனால் வெல்ல முடியுமா?
முடியும்! உண்மையான அன்பும் நேசமும் என்றும் ஜெயிக்கும்! உதய்க்கு நம்பிக்கை இருந்தது!
❀✿❀✿❀✿
ஒரு பெரிய பங்களாவின் முன் காரை நிறுத்திய உதய் சாவியை கையில் சுழற்றியபடி உள்ளே சென்றான்.
அங்கே சரத் தன் மனைவி துளசியிடம் எதையோ விளக்குவதைப் போல கைகளை அசைத்து பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தது. கல்லூரி காலத்தில் இருந்த அதே உற்சாகம், கலகலப்பு, பரஸ்பர அன்பு அனைத்துமே அவர்கள் இருவரிடமும் அப்படியே இருந்தது.
அவர்களின் காதலை தெரிந்துக் கொண்ட இரண்டு குடும்பமும் சினிமா பெற்றோரை போல் கண்மூடித்தனமாக எதிர்க்காமல், விசாரித்து, நல்ல குடும்பம், நல்ல குணம் என்பதை எல்லாம் தெரிந்துக் கொண்டு பேசி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்திருந்தார்கள்.