இருவரும் அந்த எக்ஸிபிஷன் ஹாலில் அவர்களின் நிறுவனத்திற்கென ஒதுக்கப் பட்டிருந்த இடத்திற்கு சென்றார்கள்.
அங்கே இரண்டு அட்டைப்பெட்டிகள் வைக்கப் பட்டிருந்தது.
“இந்த இரண்டு பாக்ஸ் தானே நந்திதா?” என வினவினாள் நாகு.
“யெஸ் நாகு... ஓபன் செய்து எல்லாம் செட் செய்து வச்சிடுவோம்...”
இருவரும் கவனத்துடன் அந்த பெட்டிகளை திறந்து அதில் இருந்தவற்றை வெளியே எடுத்தனர்...
எடுத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள்!
நந்திதா வெகு கவனத்துடன் வடிவமைத்திருந்த அந்த சர்க்யூட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, உருக்குலைந்து, கன்னா பின்னாவென்று காட்சி அளித்தது...
“என்ன இது???” என நாகு கேட்க, நந்திதாவால் அதிர்ச்சியினால் பதில் சொல்வது என்ன, பேசவே முடியவில்லை!!!! திகைத்துப் போய் சிலையாக நின்றிருந்தாள் அவள்...
அப்போது வழக்கமான உற்சாகத்துடன் அங்கே வந்தான் உதய்.
“ஹலோ நாகு, ஹலோ நந்திதா...!” என்றவனின் கண்கள் எப்போதும் போல் நந்திதாவை படம் பிடிக்க, அவளின் முகத்தில் இருந்த அதிர்ச்சி அவனிற்கு ஏதோ சரியில்லை என்பதை சொன்னது.
“என்ன ஆச்சு நந்திதா, ஏன் இப்படி ஷாக் ஆகி இருக்கீங்க?”
“இது தான் டிஸ்ப்ளேக்காக ரெடி செய்த ப்ரோடோடைப் உதய், அது எப்படியோ இப்படி டிஸ்கனக்ட் ஆகி இருக்கு...” என இப்போதும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமலே சொன்னாள்