“ஹ்ம்ம்... இது என்ன அநியாயமா இருக்கு... எல்லோரையும் சொன்னீங்க, உங்களை சொல்லலை?”
“அதை பத்தி தான் பேச வந்தேன்... டாக்டரே முப்பத்தி மூணு வயசுல குழந்தை பெத்துக்குறாங்க... அப்போ நாம ஏன் இன்னொரு குழந்தைப் பத்தி...”
அவன் பேசி முடிக்கும் முன், அவசரமாக அவனின் தலையை மென்மையாக தன் மடியில் இருந்து எடுத்து சோஃபாவில் வைத்து எழுந்தவள்,
“மறந்தே போயிட்டேங்க... ஸ்டவ்ல பாத்திரம் வச்சுட்டு வந்தேன்,” என்றாள்.
“ஹேய், பொய் பேசாதே... நான் சொல்ல வந்ததை கேட்டுட்டு போ...”
அதற்குள் படிகள் இருந்த பக்கம் சென்றிருந்த சுமித்ரா, நின்று அவனை திரும்பி பார்த்து...
“வெவ்வெ வெவ்வே...” என அழகு காட்டி விட்டு சென்றாள்...
கமலின் முகம் புன்னகையால் விரிந்தது....
சுமியுடன் இருந்தாலே இப்படி தான் மனமெல்லாம் லேசாகி போகும்... உலகிலேயே சந்தோஷமானவன் அவன் தான் என்ற எண்ணம் தோன்றும்...
அவனின் வாழ்வில் வந்த வசந்தம் அவள்....
பாலைவனமாக இருந்தவனை பசுமையான சோலையாக மாற்றிய மந்திரவாதி அவள்...
அவன் அவள் மேல் வைத்திருக்கும் அன்பை விட பல பல மடங்கு அதிக அன்பை வாரி இரைப்பவள்...