Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 04 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விமலும், ரோஷினியும் கண்ணில் இருந்து மறைந்ததும் கவிதா பல்லைக் கடித்தாள்.
"நீங்க என்ன லூசா அண்ணி? தனி வீடு பார்த்துட்டு போறீயா, போய் தொலைன்னு சொல்றதை விட்டுட்டு என்ன நீங்க..."
"ஹேய் கவி, என்ன இருந்தாலும் அது உன் அண்ணி மரியாதை கொடுத்துப் பேசு," என்றாள் சுமித்ரா அதட்டலாக!
"க்கும்... அது ஒன்னு தான் குறைச்சல்... தனியா போனா தானே வீட்டுல எவ்வளவு வேலை இருக்குன்னு அவங்களுக்கும் தெரியும்..."
"இருக்கட்டும் விடு கவி... வா, கிச்சனுக்கு வா... பாத்திரத்தை கழுவிட்டே பேசுவோம்..." என சொல்லி விட்டு சுமித்ரா சமையலறைக்கு செல்ல, கவிதாவும் அவளை தொடர்ந்து சென்றாள்.
பூங்கோதை அவர்கள் இருவரையும் கவனித்தப் படியே இருந்தாள்... ஒரு சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது போல் இருவரும் சிரித்து கதை பேச தொடங்கி இருந்தார்கள்...
சுமித்ரா இருக்கும் இடமே அப்படி தான் இருக்கும்... கலகலப்பாய்... கவலை என்ற ஒன்றே இல்லை என்பது போல... அவள் ஒரு தேவதை...!
தானாக பூங்கோதையின் மனம் கமலை பற்றி யோசித்தது...
பன்னிரண்டு வயது வரை அவளின் அம்மா வீட்டில் வளர்ந்த கமல் எதனாலோ வீட்டிற்கு திரும்பிய பிறகும் அவளுடன் ஒட்டவில்லை... ஒதுங்கியே இருப்பான்...
விமலும், கவிதாவும் அப்படி இல்லை... இருவருமே பூங்கோதைக்கு செல்லங்கள்... அதனால் தானோ என்னவோ அவளால் அவர்களை கண்டிப்புடன் வளர்க்க முடியவில்லை...
ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள் பூங்கோதை. கீழ் தளத்தின் கான்க்ரீட் ரூஃப் அவளின் கண்ணில் பட்டது.