எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் அப்பா செய்ய வேண்டிய கண்டிப்பு மற்றும் வழி நடத்தும் வேலையை கமல் எடுத்துக் கொண்ட போது அவளுக்கு அசுவாசமாக தான் இருந்தது...
படிப்பு முடித்ததும் கமலுக்கு முழு நேர வேலை கிடைத்து விட, பூங்கோதையின் குடும்பம் தளராமல் நிமிர்ந்து நின்றது...
கமல் இல்லாமல் அவர்களின் குடும்பம் இல்லை என்பது புரிந்து இருந்தாலும், அவனின் கூடுதல் கண்டிப்பும், எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்கும் / பார்க்கும் மனநிலையும், மற்றவர்கள் அவனை ‘ஹிட்லர்’ என்று அழைக்க காரணமாக இருந்தது.
கமலுக்கு திருமணம் நிச்சயம் ஆன போது பூங்கோதையையும் அறியாமல் மனதில் பயம் ஏற்பட்டது...
அவர்களின் குடும்பத்தின் நங்கூரம் போன்றவன் கமல், அவனின் மனைவியாக வருபவள் அந்த நங்கூரத்தை அசைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்...
அந்த பயத்தினாலேயே, கமலின் திருமணம் முடிந்த பின்பு முதல் சில மாதங்கள் மாமியாராக சுமித்ராவிடம் ‘கெத்து’ காண்பிக்க முயன்றாள். ஆனால் சுமித்ராவின் இயல்பான, இனிமையான அணுகுமுறையில் எல்லாம் தூள் தூளாகிப் போனது...
சுமித்ரா கிட்டத்தட்ட அவளுக்கு தோழியாகிப் போனாள்...
மூன்று பிள்ளைகள் இருந்தாலும் சுமித்ராவுடன் இருப்பது போன்ற மனதால் நெருங்கிய உணர்வு, வேறு யாரிடமுமே பூங்கோதைக்கு இல்லை...
பூங்கோதை தன் பாட்டில் யோசனையில் இருக்க, வேலையை முடித்த சுமித்ரா, அவளின் அருகே வந்து நின்றாள்...