Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 03 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விமானத்தில் இருந்து இறங்கிய மித்ரன், அவனின் வழக்கமான விறுவிறு நடையுடன் எங்கேயும் நிற்காமல் நேராக இமிக்ரேஷன் பகுதிக்கு வந்தான். அங்கே ஃபாஸ்ஃபோர்ட்டில் இந்தியாவிற்கு திரும்பி இருக்கும் தேதியை சீல் செய்து பெற்றுக் கொண்டு விமான நிலையத்தின் எக்ஸிட் நோக்கி நடந்தான்.
அவன் நடந்து சென்றப் போது அவன் மற்றவர்களை கவனித்தானோ இல்லையோ, மற்றவர்கள் அவனை கவனித்தார்கள்! முன் முப்பதுகளில் இருந்தவனிடம் வெற்றியுடன் மட்டுமே வரும் நம்பிக்கை மிளிர்ந்தது. அவன் அணிந்திருந்த நேர்த்தியான கோட், அவனின் பரந்த தோள்களையும், சீரான உடலமைப்பையும் எடுத்துக் காட்டியது! அவனின் நடையில் கூட கம்பீரம் இருந்தது! அவன் நடக்கும் போது, பாலீஷ் செய்யப் பட்டிருந்த அவனின் ஷூக்கள் தரையில் பட்டு ஒலி எழுப்பியது.
நேர்த்தியாக ஸ்டைல் செய்யப்பட்டிருந்த அவனின் கறுப்பான தலை முடியும், அழகாக ஷேவ் செய்யப் பட்டிருந்த முகமும் மித்ரனுக்கு கூர்மையான, கம்பீர தோற்றத்தைக் கொடுத்திருந்தது.
அவனின் கண்களில் தெரிந்த அலட்சியம், உலகத்தை தன் விருப்பத்திற்கு வளைந்து பழகிய ஒரு மனிதனை சுட்டிக்காட்டியது. அவனின் இடது மணிக்கட்டில் இருந்த விலையுயர்ந்த கடிகாரம் மித்ரனின் செல்வத்தையும் அதிகாரத்தையும் பறை சாற்றியது.
ப்ரீபெயிட் டாக்சி இருந்தாலும் அந்த பக்கம் போகாமல் அவனைக் கடந்து சென்ற ஒரு டாக்சியை நிறுத்தி ஏறிக் கொண்டான் மித்ரன்.
“அண்ணா நகர் ஆர்ச்,” என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டான்.
ஐந்து வருட சிங்கப்பூர் வாசத்திற்கு பின் இந்தியா திரும்பி இருக்கிறான். ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் கிளம்பும் போது இருந்தது போலவே தான் அவனின் மனம் இப்போதும் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சஞ்சீதா!!!
அந்த பெயரின் நினைவே அவனுக்கு வேம்பாக கசத்தது.