அவனுள் கோபம் பொங்கியது!!!
கை முஷ்டியை இறுக்கி கோபத்தை தணிக்க முயன்றான். முடியவில்லை!
பற்களை கடித்த படி, இலக்கின்றி, ஜன்னலில் வேகமாக பின்னால் ஓடிய காட்சிகளை வேடிக்கை பார்க்க முயன்றான்.
அண்ணா நகர் வளைவு வரவும், டிரைவரிடம் முழு முகவரியை சொல்லி, வழியும் சொன்னான்...
ஐந்து நிமிடத்தில் அவன் சொன்ன இடத்திற்கு வந்து நின்றது டாக்சி!
அது ஒரு பெரிய பங்களா. வெளியே அரண்மனை வாயிலை போல ஒரு பெரிய கேட். அதன் அருகே ஒரு செக்யூரிட்டி வேறு!
டாக்சியை சந்தேகத்துடன் பார்த்த செக்யூரிட்டி, அசையாமல் நின்றான்.
கார் ஜன்னலை திறந்து எட்டி பார்த்த மித்ரன், “என்ன சுந்தரம், என்னை ஞாபகம் இல்லையா?” என்றான்.
ஒரு கணம் அவனின் முகத்தை ஊற்றுப் பார்த்த செக்யூரிட்டியின் பாவனை மொத்தமாக மாறி போனது.
“சார்!!! என்னால் நம்பவே முடியலையே! அம்மா ஒன்னும் சொல்லவே இல்லையே! மன்னிச்சுக்கோங்க... இதோ கேட்டை திறக்கிறேன்...”
பதற்றத்துடன் சுந்தரம் கேட்டை திறக்க ஓட, அதுவரை கேட்டின் ஓரமாக நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நலிந்த தோற்றமுள்ள மனிதன் ஒருவன், மித்ரன் இருந்த காரின் அருகே வந்தான்.