"என்னம்மா??? பேச்சுக்கு கூட ஸ்மைல் வர மாட்டேங்குது? அப்படி என்ன பிரச்சனை? நிஷா குட்டி ஏதாவது வாலுத்தனம் செய்தாளா?"
"இல்லை சார்... இது... வேற..."
"என்ன விஷயம் சரண்யா?"
சுலோச்சனா சொன்னதில் தொடங்கி, சுரேஷ் சொன்னது வரை அனைத்தையும் அவருடன் பகிர்ந்துக் கொண்டாள் சரண்யா.
சேகர் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்... கோபி கம்பெனி தொடங்கிய நாள் முதலே ஒரு கன்சல்டன்ட் போல அவனுக்கு ஆலோசனைகள் மற்றும் 'contacts ' கொடுத்து உதவியவர்...
இப்பொழுது அவளுக்கும் ஒரு நல்ல துணையாக இருந்து உதவிக் கொண்டிருப்பவர்...
சரண்யா சொன்னதைக் கேட்டு யோசிப்பது போல அமைதியாக இருந்த சேகர், ஒரு சில நொடிகளுக்குப் பிறகு,
"நீ என்ன செய்ய முடியும் சரண்யா? பண உதவி செய்ற அளவுக்கு உன் கிட்ட பணம் இருக்கா என்ன?" என்றார்.
"இல்லை சார்... ஆனாலும் ஏதாவது செய்யணும்னு தோணுது..."
அவளை உற்றுப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்த சேகர்,
"இப்படியே சொல்லி தான், கம்பெனில வர பாதி லாபத்துக்கு மேல வேலை செய்றவங்களுக்கு கொடுத்திடுற..."
"வேலை செய்றது அவங்க தானே சார்..."