எப்படியாவது அவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்பது தான் அம்மாவின் இப்போதைய ஆசை... அவனுக்கு அது புரியாமல் இல்லை...
ஆனால் அவனின் கல்யாணம் என்பது நந்திதா சம்மதித்தால் தானே நடக்கும்... இப்போது தான் அவள் அவன் பக்கமே பார்க்க ஆரம்பித்திருக்கிறாள்... எப்போது அவள் அவனை புரிந்துக் கொள்வது... எப்போது அவன் அவள் மனதை வெல்வது... அதற்கெல்லாம் இன்னும் நேரம் வேண்டுமே...
நந்திதா அன்று அவனை பார்த்து திகைத்து நின்றது அவனின் நினைவுக்கு வந்தது...
அவர்களின் உரையாடலை ரீவைன்ட் செய்து பார்த்தவன், “மை செல்ல க்யூட்டி.... நதி....!” என்று அவளை செல்லம் கொஞ்சிக் கொண்டான்.
நந்திதா திடீரென அரை நாள் விடுப்பு எடுத்து சென்றதாக நாகு சொன்னதும் நினைவுக்கு வர செல்ஃபோனை கையில் எடுத்தான்.
துளசியை அழைப்பதா, நந்திதாவை அழைப்பதா என ஒரு வினாடி தயங்கியவன், இனி ‘டைரக்ட் அட்டாக்’ தான் சரி என முடிவு செய்து, நந்திதாவின் எண்ணை அழைத்தான்.
❀✿❀✿❀✿
நந்திதாவின் செல்ஃபோன் சிணுங்கிய நேரம், அவளும் துளசியும் கல்லூரி கால கதைகளை பேசிய படி, தோட்டத்தில் புது செடிகளை நட்டு வைக்க மண்ணை தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
“நந்து உன் ஃபோன் தான் அடிக்குது... யாருன்னு பார்க்குறேன் இரு...” என்று தோழியின் ஃபோனை எடுத்து பார்த்த துளசி, அழைப்பது உதய் என்பதை உணர்ந்து ஆச்சர்யப்பட்டாள்.
“நந்து, உதய் கால் செய்றான்...”