அந்த மலர்ச்சியை சங்கீதாவும் கவனிக்கத் தான் செய்தாள்! அவளின் உதடுகளில் புன்னகை தோன்றியது!
✽✽✽
“ஏன்ம்மா, மஞ்சரி அக்கா கிட்ட அப்புறம் பேசினீங்களா?”
சம்மந்தமே இல்லாமல் திடீரென மஞ்சரியை பற்றி கேட்ட சத்யாவை கேள்வியுடன் பார்த்தாள் ஈஸ்வரி...
“சும்மா கேட்டேன்ம்மா...” என்று மழுப்பி விட்டு வேறு எதையோ பற்றி பேசத் தொடங்கினான் சத்யா...
ஆனாலும் ஈஸ்வரிக்கு ஆர்வம் தோன்ற தான் செய்தது...
எனவே மஞ்சரியை ஃபோனில் அழைத்துப் பேசினாள்...
சத்யா சொன்னது போல சும்மா பேசினேன் என்று ஆரம்பித்து, பேச்சுவாக்கில் தேன்மொழிக்கு திருமணமாகி விட்டதா என்றும் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்!
✽✽✽
இரவு உணவு முடித்து மாடிப் படியில் அமர்ந்து பௌர்ணமி நிலவை ரசித்துக் கொண்டிருந்த தேன்மொழியின் அருகில் வந்தமர்ந்தாள் மஞ்சரி.
"என்ன தேன்மொழி தூக்கம் வரலையா? அதிசயமா இந்த பக்கம் வந்திருக்க?"
"சும்மா தான் அண்ணி...” என்ற தேன்மொழி, சின்ன இடைவெளிக்குப் பின், “அண்ணி, உங்களுக்கு அந்த சத்யா ஞாபகம் இருக்கா?" என்றாள்!