❀✿❀✿❀✿
பத்து மணிக்கு டானென்று சரண்யா முன் வந்து நின்ற மித்ரன்,
“லெட்ஸ் கோ...” என்றான்.
அமைதியாக எழுந்து நடந்தாள் சரண்யா...
சிறிது இடைவெளி விட்டு நடந்தாலும், மித்ரனுடன் நடப்பது ஏனோ அசௌகரியமாக தோன்ற வேகத்தை குறைத்து அவனின் பின்னே நடந்தாள்.
மித்ரன் அதை கவனித்தானோ என்னவோ, எதுவும் சொல்லவில்லை...
ப்ரொடக்ஷன் லைனில் இருக்கும் இயந்திரங்கள் ஒவ்வொன்றை பற்றியும் சரண்யா அவனுக்கு விவரிக்க, வெகு கவனமாக கேட்டுக் கொண்டான் மித்ரன்.
கோபி இருந்தவரையில் அவளுக்கு பெயர் அளவில் தெரிந்த விஷயங்கள் தான்... அவனுக்கு பின், மூன்றாண்டுகளில் அவளே சிரத்தையாக கற்றுக் கொண்ட விஷயங்கள் என்பதால் அதை பற்றி விளக்குவது அவளுக்கு எளிதாக இருந்தது...
அங்கே வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மரியாதையுடன் எதிர் கொண்டனர்...
அதிலும் சரண்யாவிடம் அவர்கள் காட்டிய கூடுதல் அன்பும், பணிவும் மித்ரனுக்கு எரிச்சலை தந்தது...
மெஷின்களின் இரைச்சலுடனே சத்தமாக அவனுக்கு விளக்கி கொண்டிருந்த சரண்யாவிற்கு, சத்தமாக பேசியதாலோ என்னவோ இருமல் வந்துவிட, மூன்று பேர் ஒரே நேரத்தில் நீரை எடுத்து வந்து நீட்டினார்கள்!