விரலை குத்தியது வலி ஒன்றும் இல்லை ஆனாலும் என்னவோ பவித்ரமான தாலி அவனை குத்தும் போது பெரும் வலி உண்டானது போல உணர்ந்து உள்ளுக்குள் நொந்தப்படியே தாலியை பிரித்து எடுத்து அதை அவளிடம் தந்தான். அதை பத்திரமாக வாங்கிக் கொண்டவள் அவன் முன் நின்றாள் தைரியமாக, அவனது ஆட்களோ
”அண்ணா என்ன அண்ணா இது உன்னால முடியலைண்ணா விடு, நாங்க போய்ட்டு வரோம்” என சொல்ல அவனோ
”நானே வரேன் இருங்க” என சொல்லியவன் அவசரமாக அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு 5 மாடி ஏறி தனது வீட்டில் விட்டவன் சோர்ந்துப் போய் சோபாவில் அமர்ந்தான். அவளும் அவனுக்கெதிராக நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து அவனையே பார்த்தாள் கெத்தாக, அவளின் முகத்தில் தெரிந்த சோர்வையும் தாண்டி அவளின் உறுதியைக் கண்டு மெச்சிக் கொண்டவன் மெல்ல அவளிடம் தனது கைத்துப்பாக்கியை நீட்டினான்
”இந்தா வாங்கிக்க”
”இது எதுக்கு”
”உனக்கு என்ன நியாயம் வழங்கறதுன்னு எனக்குத் தெரியலை, அதுக்காக நீ சொல்ற மாதிரி என்னால இந்த ஊரை விட்டு வரமுடியாது, என்னைப் போட்டுத்தள்ள நான் இருக்கற ஏரியாவுக்கே அந்த கருணா ஆளுங்களை அனுப்பிட்டான். என்னை அவன் விடமாட்டான்
ஒண்ணு நான் அவனை கொல்லனும் இல்லை அவன் என்னை கொல்லனும், அப்பதான் இந்த பிரச்சனை ஓயும், என் பிரச்சனையில நீ மாட்டி அநியாயமா செத்துடாத, வாழ வேண்டிய பொண்ணு நீ, உனக்குன்னு குடும்பம் இருக்கு, எனக்குன்னு யாரும் இல்லை, எந்த கடமையும் இல்லை, பேசாம இங்கிருந்து கிளம்பி ஊருக்கு போ இல்லையா
இந்தா துப்பாக்கி என்னால நீ கேட்கற நியாயத்தை வழங்க முடியாது, அதுக்குப் பதிலா நீ என்னை கொன்னுட்டு போயிடு, கண்டிப்பா உன் மேல யாருக்கும் சந்தேகம் வராது, கருணா மேலதான் சந்தேகம் வரும் அவன்தான் என் எதிரி என்னை கொன்னிருக்கனும்னு எல்லாரும் முடிவெடுப்பாங்க, உனக்கு எந்த பிரச்சனையும் வராது நேரத்தோட என்னை கொன்னுட்டு கிளம்பு