”அப்படியா சந்தோஷம் அப்புறம் என்ன நீங்க எல்லாரும் கிளம்புங்க” என ஆணையிடவும் உடனே அவனது ஆட்கள் 10 பேரும் 2 வண்டியில் ஏறிக் கொள்ள அவனுக்கென ஒரு ஜீப் வந்தது. அதில் அவன் ஏறவும் கூடவே சம்யுக்தாவும் ஏறிக் கொண்டாள்.
“இதப்பாரு என் வண்டியில ஏறாத, நானே பெரிய சம்பவத்துக்கு போறேன், அதோ பாரு உன் கார் இருக்குல்ல அது நல்லா வசதியாயிருக்கும், இந்த ஜீப் உனக்கு செட்டாகாது, நீ அதுல வா, ஏசியில உன் கோபம் குறையுதான்னு பார்க்கறேன் இறங்கு”
”முடியாது உன்னை நான் விடமாட்டேன்” என்றாள்
சித்தன் வண்டியோட்டினான். கருணா இருக்கும் இடமோ கடலூரில் உள்ள கடற்கரை பகுதியில், அங்குச் செல்ல எப்படியும் சில மணி நேரமாவது ஆகும் அதனால் வண்டியை வேகமாக ஓட்டினான் சித்தன்.
தில்லையோ ஒரு முடிவுடன் இருந்தான். சம்யுக்தாவும் ஏதும் பேசவில்லை, அமைதியாக தன் கையில் இருந்த தாலியையே பார்த்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அவளைப் பார்த்த தில்லையோ அவளின் வருத்தத்தைக் கண்டு அவள்மீது பாவமே பட்டான் ஆனாலும் அவளுக்கு எப்படி நியாயம் வழங்குவது என பலமாக யோசித்தபடியே சென்றான்.
ஒருவழியாக கடலூரும் வந்தது. கருணா மறைந்திருக்கும் கடற்கரை பக்கமே வண்டிகள் சென்றது. அங்கிருந்த குடிசை பகுதியில் ஒன்றில்தான் கருணா மறைந்திருக்கிறான். அதனால் கடற்கரை வரவும் வண்டிகள் நின்றது, தில்லையோ அவளிடம்
”நீ இங்கயே இரு, வராத, நானே கருணாவை கொன்னுட்டு வந்துடறேன்”
”முடியாது என்னை இங்க விட்டுட்டு போகனும்னு நினைக்கறியா உன்னை நான் விடமாட்டேன்“
”லூசா நீ இங்க பெரிய சம்பவம் நடக்கப் போகுது, எதிரிங்க நம்மளை கொல்லப் பார்ப்பானுங்க”