உங்களுக்கு தெரியாதா? நாம நம்ம பொண்ணுங்க கிட்ட போய் கேட்க முடியுமா???”
“நீ சொல்றது சரி கௌசி,” என்ற சேகர் சரண்யாவை யோசனையுடன் பார்த்தார்.
அவளும் யோசனையில் தான் ஆழ்ந்திருந்தாள்.
புரிந்துக் கொண்டவராக, “உன் நிலைமை எனக்கு புரியுது சரண்யா... ஜிஎஸ்’ல கன்சல்டன்ட் போல இருந்த எனக்கே இப்படி இருந்தா உனக்கு எப்படி இருக்கும்... நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்றேன்... நல்ல வேகன்சி எதாவது வந்தா உனக்கும் இன்ஃபார்ம் செய்றேன்,” என அவளை தேற்றுவதுப் போல சொன்னார் சேகர்.
“தேங்க்ஸ் சார்,” என்பதற்கு மேல் சரண்யாவால் வேறு எதுவும் கேட்க முடியவில்லை!
மேலும் சில நிமிடங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள் சரண்யா.
சேகரை ஓய்வெடுக்க சொல்லி விட்டு அவள் வீட்டின் வெளியே வர, கௌசல்யாவும் அவளுடனே வந்தாள்,
“உன் கிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீயே சரண்யா...”
“தப்பாவா?? என்னம்மா, சொல்லுங்க...” என கௌசல்யாவின் கேள்வி கொடுத்திருந்த ஆச்சர்யத்தை மறைக்காமலே சொன்னாள் சரண்யா.
“வேற வேலை தேடுறதை பத்தி பொறுமையா யோசிச்சு முடிவு எடு சரண்யா... உலகத்துல நீ நினைக்குற மாதிரி நல்லவங்க மட்டும் இல்லை... கெட்டவங்களும் இருக்காங்க... பேப்பர்ல வர நியூஸ் எல்லாம் படிச்சா பயமா இருக்கு... அஞ்சு வயசு குழந்தைல இருந்து அம்பது அறுபது வயசானவங்க வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பில்லைன்னு தோணுது...”
சரண்யா என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாக நின்றாள்.