கருணாவின் அடியாட்களுடன் தனது அடியாட்கள் சண்டையிடும் சத்தம் கேட்டதும் அதைக் கவனித்தான்.
கருணாவின் அடியாட்களிடம் துப்பாக்கியில்லை, கத்தியும் அரிவாளும்தான் இருந்தது. இன்னும் கருணா வரவில்லை. அவன் குடிசையில் இருக்கிறான். தனது ஆட்களிடமும் துப்பாக்கி முதல் அனைத்து ஆயுதங்களும் இருந்தபடியால் அவர்களை நினைத்து தில்லை பயப்படவில்லை, அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என நினைத்தான் ஆனாலும் அவர்களுக்கு உதவ எண்ணி இருந்த இடத்தில் இருந்தே குறிபார்த்து எதிரியின் சில ஆட்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். அதில் 3 பேருக்கு காலில் அடிபட்டு விழுந்துவிட தில்லையின் ஆட்களோ
”அண்ணா கருணா பின்பக்கமா ஓடறான் போ போய் பிடி போ, இவனுங்களை நாங்க பார்த்துக்கறோம்” என கத்த அதில் தில்லையும் சுறுசுறுப்பானான். சம்யுக்தாவை பார்த்து
”இங்கயே இரு கருணா தப்பிச்சி ஓடறான் அவனை கொன்னுட்டு வரேன்”
”முடியாது நீ என்னை விட்டு போயிடுவ”
”நான் போகலைம்மா”
“உங்கம்மா மேல சத்தியம் பண்ணு, நீ என்னை விட்டு போக மாட்டேன்னு” என கேட்க அவனோ ஒரு நொடி வியந்தான். பின்பு அவளிடம் சிரித்தபடியே
”அம்மா மேல சத்தியம் உன்னை விட்டு போக மாட்டேன், வந்துடறேன் இங்கயே இரு” என சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.
அவளும் அவனுடன் எழுந்து நிற்க அவனோ
”நீ ஏன் வர்ற இங்கயே இரு”
”இல்லை உங்கம்மாதான் இறந்துட்டாங்களே, அப்புறம் சத்தியம் எப்படி செல்லும் நீ என்னை ஏமாத்தற, நானும் உன்கூடதான் வருவேன்” என சொல்ல அவனுக்கு கோபமே வந்தது.